தனித்த அறையில்
யன்னல் சாத்தி...
மவுனமாக
வாசிக்க மட்டுமே
முடியுமான -
வார்த்தைகளாகத்தானிருக்கின்றன
அமைதியும்...நிம்மதியும்.
சுவாசிக்கத் துணிதல்
'செத்துப்போ' என்கிற
மிரட்டலில் -
பணிவதில்லையாயினும்,
அச்சமின்றி...ரத்தமின்றி
ஆர்வமாயொரு
வாழ்க்கை வாழும்
வரமில்லையா நமக்கு?
கால்நூற்றாண்டு காலம்
காலைக் கழுத்தைக்
கவ்வியும் இழுத்தும்...
யுத்தப் பாம்பு தின்ற
காயம் ஆறுவதற்குள்,
குட்டித் தீவின்
குரல் வளையில்
புற்றுநோயாகப்
பரவுகிறது,
துவேஷிகள்
உமிழும் எச்சம்.
இம்முறையும்...
இனத்தின் மீதான
வெறி வெளிச்சத்தை
மதத்தின் வேரறுத்துத்தான்
பீய்ச்சியிருக்கிறார்கள்.
தீ தின்னச் சொல்லும்
பேய்களாய் -
துணிந்திருப்பது
துறவிகள் என்பதில்
வெட்கிக்கிறது போதிமரம்.
கழுகுப் பிறப்பாய்
- நம்மை
நகம் தின்னச் சொல்கிறார்களா,
பிணம் தின்னச் சொல்கிறார்களா?
அசிங்கம் தின்னச்
-சொல்கிறது...
'ஹலாலு'க்கு எதிரான
- கூச்சல்.
ஆரோக்கியம் உரித்து
நோய் தின்னச் சொல்கிறது
வெளவால் கூட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக