மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 23 டிசம்பர், 2013

கறுப்புக் குடையாக...



பார்வையில் மட்டும்
வர்ணங்கள் தெறிக்க

நனையக் காத்திருக்கும்
கறுப்புக் குடையாகத்தான்
விரிந்திருக்கிறது....

என்னை எதிர்கொண்டு
கொல்லும்
உன் மவுனம்!

_ ரிஸ்கி ஷெரீப்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மனசின் வரிகள்


நீ சுருட்டியெறிந்த
வெற்றுத்தாளிலும்
வாசிக்க முடிகிறது...

உன்
மனசின் வரிகளை!

_ ரிஸ்கி ஷெரீப்.

சனி, 21 டிசம்பர், 2013

கவிதையின் நறுமணம்


பூக்களில்
முகர்ந்து தேடி
ஏன் தோற்கிறாய்

உனக்கான
எனது கவிதையின்
நறுமணத்தை!

- ரிஸ்கி ஷெரீப்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெய்வத்தின் பாதம் கழுகி...



தெய்வத்தின்
பாதம் கழுகித்

தன் பாவம்
கரைத்துக் கொள்கிறது...

ஊரைப் புரட்டித்
திமிர் பிடித்தோடி

உயிர்களைக்
குடித்துப் பெருத்து

நெடுநாள்
வற்றாதிருந்த
பெருவெள்ளம்!
 

- ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 16 டிசம்பர், 2013

அடிவயிற்று நெருப்பு



அடுப்பாகப்
பற்றியெரியும்
அடிவயிறு...

கொதிக்கும் மனசுக்குள்
வெந்தவிகின்றன
பிரச்சினைகள்!
  
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 12 டிசம்பர், 2013

என் விழி மூடுமோர் கணம்...



ஒரு திரைப்படத்துக்காக நான் இயற்றிய பாடல்...

என் விழி மூடுமோர் கணம் துயில் கொள்ள வாயேன்
என் விரல் தூரிகை தொட்டெடுக்கும் துளியாக வாயேன்
தனிச்சாமம் வியர்த்துருகும் உடலாக வாயேன்
தளர்ந்துருகும் தொண்டைக்கோர் புனலாக வாயேன்...
(என் விழி மூடுமோர்)

மண்ணாசை பொன்னாசை எனக்கேதுமில்லை 

பெண்ணாசையென்றாலும் உன்னோட எல்லை
வாழ்வாசை என்றென்றும் சாகாத தொல்லை
தீயாசை தோற்காது எரிக்காமல் என்னை...
(என் விழி மூடுமோர்)


காற்றாக அலைகின்றேன் உன்னிதழ் வருடிவாழ
காட்டாறாகக் கொதிக்கின்றேன் நீயழுது மாள
கூவாத குயிலாகத் துடிக்கும் என் காதல்
தோகை விரிக்காத மயிலாகத்தான் நோகும்
தொடரும்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

மரணத்துக்கும் பெருமை


மண்டேலாவை
வாரியெடுத்து

அணைத்து உடுத்தி...

மறுபடியும் தன்னை
அலங்கரித்துக்கொண்டது
மரணம்!
- ரிஸ்கி ஷெரீப்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

இருவேறு வீடுகளில்...

அவள் வெட்கம்
கடித்துத் துப்பிய
நகத் துண்டங்களை
அவனும்

அவன் சோர்வை
எரித்துத் தீய்த்த
சிகரட் துண்டங்களை
அவளும்

இற்றைக்கும்
மறைத்தொளித்துத்தான்
சேமித்து வருகிறார்கள்

இருவேறு வீடுகளில்
வெவ்வேறான வாழ்க்கையை
ஆரம்பித்த பிறகும்!

ரிஸ்கி ஷெரீப்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

முகம் கழுவும் மலர்


அதிகாலைப் பனிப் புனலில்
தன் முகம் கழுவிக்கொள்கிறது

உறக்கம் கலைந்தெழும் மலர்!

- ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 25 நவம்பர், 2013

தனித்துச் சுருண்டு படுக்கும்...


அரிதாரம் பூசித் திருத்தி
எத்தனை அழகுபடுத்தினாலும்

அழியாக் கருமைப் புள்ளியாக
உறுத்திக்கொண்டுதானிருக்கிறது

வறுமை வரைந்த சித்திரங்களில்

தரைவிரித்த பாயில்
தனித்துச் சுருண்டு

ஒருக்களித்துப் படுத்திருக்கும்
அகோரப் பசியின் அவலம்!

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 21 நவம்பர், 2013

பனியுறைந்த நதியுலாவும்...


பனியுறைந்த நதியுலாவும்
மீனாகத்தான் இருக்கிறேன்

என் குளிரை
உன்னில் போர்த்திய
கணம் முதல்!

- ரிஸ்கி ஷெரீப்.

கசக்கும் மாத்திரைகளாக...


கசக்கும்
மாத்திரைகளாக

நான்கு சுவர்களுக்குள்
தனித்தமர்ந்தழுது

விழுங்கித்தான்
ஆகவேண்டியிருக்கிறது

அவ்வப்போது
சிறு பெரு துயர்களையும்!

-ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 18 நவம்பர், 2013

விருந்தோம்பக் காத்திருக்கின்றாள்

விழி விடுத்த
அழைப்பையடுத்து

விருந்தோம்பக்
காத்திருக்கின்றாள்

அவசரமாகத் தன்னை
அலங்கரித்துக்கொண்ட
அழகான செவ்விதழ் பெண்!

- ரிஸ்கி ஷெரீப்.

சனி, 16 நவம்பர், 2013

மனசற்ற யாரோ...

அரையிருட்டப்பிய
அமானுஷ்யம் சுற்றிவரக்
குப்பிவிளக்கெரிய

மரணப் படுக்கையில்
அனாதையாகக் கிடக்கிறது...

மனசற்ற யாரோ
முதுகு முள்ளந்தண்டில்
உடைத்தெறிந்ததோர் மலர்!

- ரிஸ்கி ஷெரீப்.

உன் எச்சில் சுவையோடு...


உலர்ந்த
உன் உதடுகளில்
புரிகிறது

அதீத தாகம்தான்
ஆயினும்

மறந்தேனும்
ஒரு மிடறில்
அருந்திவிடாமல்

உன் எச்சில் சுவையோடு

சிறுதுளியேனும்
மிச்சம் வைத்துப் போ

நான் போட்டு
நீயருந்தும்
தேநீரில்!

- ரிஸ்கி ஷெரீப்

வெள்ளி, 15 நவம்பர், 2013

என் ஊஞ்சலில் உன் காதல்



இப்போதைக்கும்
என் ஊஞ்சலை
ஆட்டுவிக்கிறது

எப்போதோ
நீ விட்டுச்சென்ற
காதல்!

- ரிஸ்கி ஷெரீப்.

ப்ரார்த்தித்துக்கொள்




காலை மழையில்
சிதைந்து சிதறிய
வாசற் கோலமாய்

கலைந்திருக்கிறது
மனசு

முடிந்தால் கொஞ்சம்
ப்ரார்த்தித்துக்கொள்

உனைச் சந்திக்க
வரும் வழியில்

ஒரு தண்டவாளமோ
ஆழப் பாழுங் கிணறோ
அலை பெருத்த கடலோ

என் பார்வையில்
படாமலிருக்கக் கொஞ்சம்
ப்ரார்த்தித்துக்கொள்1

- ரிஸ்கி ஷெரீப்.

தொலைதூரம்


இப்போதெல்லாம்
தொலைதூரமாகத்தான்
தெரிகிறது...

எனை விட்டுத் தள்ளி
நீயமர்ந்திருக்கும்
குறுந்தூர இடவெளியும்.

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 14 நவம்பர், 2013

எச்சில் உறைந்த பசி


சிறுதுளி மழையில்
நனைகிறது தனிமை

நீண்ட தண்டவாளமாய்
மல்லாக்கப் படுத்திருக்கிறது...

ஏக்கம் மேவிய
தொண்டையிடுக்கில்
எச்சில் உறைந்த பசி

கண்ணுக்கெட்டாத்
தொலைதூரமாயினும்
அவசியம் கருதி
அவசரமாயொரு துளி
எடுத்து வரமாட்டாயா

என் குளிரருந்தக்கூடிய
உன் மூச்சுக்காற்று
மின்சாரத்தை!
_ ரிஸ்கி ஷெரீப்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

காதணிகளிலாவது தொங்கவிட்டிருக்கலாம்...

கால் கொலுசில்
வீணடித்திருக்காமல்

கண்மணி...
நீ காலத்துக்கும்
கேட்கும் இசையாக

உன் காதணிகளிலாவது
தொங்கவிட்டிருக்கலாம்
என் காதலை!
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 7 நவம்பர், 2013

பனித்துளிப் பவுடரடித்து வரும்...

சிறு சொர்க்கக் கிறக்கத்தில்
அரை விழி மூட
தலை கோதிவிடுகிறது

புறக்கை மயிலிறகாய்
சில்லென்ற ஸ்பரிசத்தில்
காதுமடல் தாண்டிக்
கன்னத்தை வருடுகிறது

பின்னங்கழுத்தில்
உஷ்ண மூச்சாய்ப் படர்கிறது

சேலை விலகிய
இடை ஊடறுத்துத் தழுவியும்
நழுவுகிறது

ஆயினும்

காதல் தீப்பிழம்பு குளிரக்
கட்டியணைத்ததன் மாரில்
ஒரு சில கணம்
முகம் புதைக்க முடிவதில்லை

பனித்துளிப் பவுடரடித்து வரும்
அதிகாலை நேரக் காற்றை!

_ ரிஸ்கி ஷெரீப்

சனி, 2 நவம்பர், 2013

அலுப்பு



நசிந்து சிதறிச் செத்தவிந்த
எலியின் வீச்சம்

புகை வளையங்களாய்க்
கரையும் ஊதுபத்தி வாசம்

இரண்டுக்குமிடையிலான
அதிருப்திச் சுவாசம்

இப்போதெல்லாம்...
ஏனோதானோவென்று

அலுத்துப் போய்க்கொண்டிருக்கிறது
ஆட்சியும் வாழ்க்கையும்!
- ரிஸ்கி ஷெரீப்.

அழகோவியத்தின் தலைக்கனம்



அழகோவியத்தின் தலைக்கனத்தை
தம் உடல் முழுக்கப்
போர்த்திக் கொள்ளும் விரல்கள்

அமைதியாகத்தான் இருக்கிறது...

ஆலாபனைக்குப் பின்னயர்ந்து
சுருண்டு படுத்தெழுந்தின்னும்
குளித்து முழுகாத தூரிகை!

_ ரிஸ்கி ஷெரீப்.

ஆர்வமற்றவள்



எண் திசைகளிலும்தான்
திரிகிறாய்...

என் திசை தேடும்
ஆர்வமற்றவளாய்!

- ரிஸ்கி ஷெரீப்

கறுப்பு இரவுகள்



அழகாய்த்தான் விடிகின்றன
எனது அதிகாலைகளும்

பகலின்
பசி மயக்கத்தில்

இரவுகள் மட்டும்
எப்போதும்போலவே

கறுப்பாகத்தான் கரைகின்றன
ஒளியற்ற நிலா செத்து!

- ரிஸ்கி ஷெரீப்

விழித்துளி நெருப்பு


நடு நெஞ்சில் ஊடுருவி
முள்ளந்தண்டில் சுடுகிறது

உன்
விழித்துளி நெருப்பு!

ரிஸ்கி ஷெரீப்

கவிதைக்காரன் டயரி



கவிதைக்காரன் டயரியில்
கிறுக்கல்களாகத்தான் தெரியும்
அழகான அவன் மனசும்!
 

- ரிஸ்கி ஷெரீப்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மவுனத்தின் வலி

தொண்டைக்குழியில்
கசப்பு மாத்திரையாக
இறங்க மறுக்கிறது

உன் மவுனம்
பெயர்த்தெடுத்தெறியும்
வலி!

_ ரிஸ்கி ஷெரீப்
27/10/2013

வெள்ளி, 25 அக்டோபர், 2013

காற்றின் சினம்



கன்னத்தில் அறைந்து சென்றும்
கடிந்துகொள்ள முடிவதில்லை

காற்றின் கரங்களையும்

கடுங்கோபம் வலிந்தெடுத்துச்
சிறு கணத்தில் தோற்கும்
உன்னையும்!
   
    ரிஸ்கி ஷெரீப்
    25/10/2013

மைத்துளிகளாகவும் வாழ்கிறாய்...




சிதறிய
மைத்துளிகளாகவும்
வாழ்கிறாய்...

கறைபடிந்தும் துவைக்காத
துணியாக நான்!
- ரிஸ்கி ஷெரீப்.
25/10/2013

எங்கேயிருக்கிறாய்?

 
 எங்கேயிருக்கிறாய்?

எந்தத் திசை?
எத்தனை தொலை தூரம்?

காலத்துக்கும் சொல்லத்
தவித்துத் தோற்ற
என் காதலைப்போலச் சுகமானதோர்
மிதமற்ற குளிர் தேசமா?

சதாவும் வியர்வை உடல்
குடிக்கத் துடிக்கும் முரட்டுப் பாலையா?
இல்லை...
அச்சம் அச்சாணியடித்ததோர் நாட்டின்
இடிபாட்டுக் கட்டிடங்களில் ஏதோவொன்றா?

எங்கேயிருக்கிறாய்?

நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
உன் தேசத்தில்
உன்னைத் தவிர எல்லோரும் இருக்கிறார்கள்

கனவுகளுக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியில்
அவ்வப்போது பருந்துகளும் பறக்கின்றன

ஒடிந்து விடாத சிறு கிளைகளில் நின்று
அழகான ஜோடிக் கிளிகள் அவ்வப்போது
முத்தமிட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்

காலம் வெகுவாய் மாறியிருக்கிறது
- உன்னைப்போல
காதல் மட்டும் அதன்பாட்டுக்கு
அப்படியேதானிருக்கிறது...என்னைப்போல

எல்லாம் சரி கண்மனி...
இப்போது எங்கேயிருக்கிறாய்?

துயர் நூலெடுத்துப் பின்னிய வலைகள்
சகிதமானதோர் ஒட்டடைச் சூழலா?
இல்லை...
மருதாணிக் கைகளும் மணக்கும் மஞ்சமுமான
மகிழ்ச்சி வலயத்துக்குள் தாபிக்கப்பட்டதோர்
மொசைக்தரை மாளிகையா?

நீ விலகி நடந்த தூரம்
உன்னையெங்கே வைத்திருக்கிறதென்று
இற்றைக்கும் தெரியவில்லைதான்

ஆனால்
எனக்குள் மட்டும் எப்போதும்போல
அப்படியேதான் இருக்கிறாய்...
கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியானதோர்
தனித்த தொட்டியின் ஊதாநிறப் பூச்செடிபோல.

_ ரிஸ்கி ஷெரீப்.
25/10/2013

திங்கள், 16 செப்டம்பர், 2013

எமது உயிரின் உயிருக்குயிரான...



இன்று செப். 16, மர்ஹூம் அஷ்ரப்பின் 12வது நினைவு தினத்தையொட்டி...

சிறகு விரித்துச் சென்றிருந்த
தேர்தல் விழாவின்
இதழ்களில் அமர்ந்த நேரம்

இனிமையான வஸ்துக்கள்
அருகிவரும் இந்நாளில்

எண்ணச் சுவர்களில்
சிதைவுகள் தந்து

அன்பெனும்
ஆணிவேர் உசுப்பி

அறிவின் கிளைகளில்
நிரந்தரக் கண்ணீர் தந்து
போனவனே...

சுகமாய்ச் சும்மாயிருந்த
நுரையீரலுக்கு
சுவாசத்தைச் சொல்லிக்
கொடுத்தவனே...

எமது உயிரின்
உயிருக்குயிரான
அமைச்சரே...அஷ்ரபே...

காணாமல்போன எம்மைக்
கண்டெடுத்து மீட்டெடுக்காமல்
எம்மில் காணாமல்போன
உனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்

நாமாகிவிட்ட
நானையும் நீயையும் நண்பர்களாக்கி
நொடிகளை வாழ்வித்தபடி
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தவனே...

மார்புக்குள் நெஞ்சில்லா
மடச்சமூகம் அழித்தொழிக்க
மரச் சின்னத்தோடு வந்தவனே...

நீ மரம் தரித்தே
சென்ற மாயமென்ன?

மலைத்தொடர்கள்
தொப்பியணிந்திருந்த
பனிப்போர்வைக் குளிரில்
வெடவெடத்துக் குளிர்காய
வந்த நெருப்போ உனை
உருமாற்றிச் சென்றது? சொல்...

யுத்த பூமியில்
வாழ்வாசை தோற்கப்
போராடியவனே...

உள்ளுக்குள் நடந்த
யுத்தத்திலும்
உன் வாழ்வாசை தோற்றதோ?

மருத்துவத்தையே மருதலித்து
அகன்று சென்ற மாயமென்ன?

ஒப்பில்லாச் செப்பமொன்று
உடம்பணிந்து வந்த மாதிரி...

கண்டவுடன்
கைகூப்பக் கட்டளையிடும்
கம்பீரங்களங் கனிந்த முகம்

பளிச்சுப் பளிச்செனப்
பழுதில்லாப் பேச்சு

அழுக்கறியா அகம் முழுதும்
பளிங்கைத் தோற்கடிக்கும்
பளபளப்புத் தூய்மை

அகத்துள் தூய்மையால்
அந்தந்த நொடிகளில்
குழந்தைபோல் குதூகலம்

எல்லாம் மறக்கடித்துப் போனவனே,

நீ போயிருக்கலாம்...

எம் ஞாபகங்களையும்
எடுத்துப் போயிருக்கலாம்.

வேர் ஆகிப்போக வேண்டிய
நீயோ வேறாகிப் போனாய்...
எம் வழிநெடுகவும்
வழுக்குச் சேறாகிப்போக.

இப்போதெல்லாம்
தின்பதை உணவென்கிறார்கள்
திளைப்பதை நுகர்வென்கிறார்கள்
வாழ்க்கை வியக்கிறது

சப்தத்தை இசையென்கிறார்கள்
ஆசையை அன்பென்கிறார்கள்
வாழ்க்கைக்கு வியர்க்கிறது

பிழைப்பதை வாழ்வென்கிறார்கள்
எல்லாமே எனதென்கிறார்கள்
வாழ்க்கைக்கு வலிக்கிறது

சாதிகளினால் ஆன
சமுதாயம் கட்டி

மதங்களால் ஆன
மானுடம் நடித்து

எல்லோரும்
தங்கள் கூத்தை
தாமே ரசிக்கிறார்கள்

எப்படியோ...நீயில்லாததில்
கனாக்களைத் தின்றுவிட்டு
இராக்களை விழிக்கிறார்கள்

அந்நேரமெல்லாம்...
எம்மோடு சேர்த்து
வாழ்க்கைக்கும் சுரக்கிறது
கண்ணீர்!

- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
(செப்.24-30,2000 தினகரன்/செந்தூரம் இதழில் எழுதிய கவிதை.)
Like · · · 8

புதன், 4 செப்டம்பர், 2013

கைதட்டியழைத்து கன்னத்தில் அறையும் அமெரிக்கா!


கைதட்டியழைத்து
கன்னத்தில்
அறையாமல்

வம்புக்கும் வீம்புக்கும்
எண்ணெய்க்கும்
அலையாமல்

அதிகார போதையில்
நெறி தவறி
முறைக்காமல்

அமெரிக்கா கொஞ்சம்
அமைதியாக
இருக்குமானால்

தெருவோரம்
அரையாடையுடுத்திய
அகதிகளாகவன்றி,

இவ்வுலகம்
இலைபோட்டு
விருந்துண்ணும்

மனிதர்களால்
ஜெயித்திருக்கும்
எப்போதும்

மாறாக,
தலைக்கேறிய போதை
தெளியாமலேயே

சுதந்திர தேசங்களின்
குருதி புசிக்கலைகிறது...

சுடர் விட்டெரியும்
சுதந்திர ஜோதியை

தன் தலையில்
கிரீடமாகச் சூடிய
அமெரிக்கா!
          - ரிஸ்கி ஷெரீப்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஸீ ஸீ... சீச்சீ உன் பிறப்பு!


சாத்தான் தோட்டத்துக்
காட்டேறியின்

விஷத்துளிதான்
தனக்குள் கருக்கட்டியதாகத்
தெரிந்திருந்தால்

இந்த ஈனப்பிறவி
குடியிருந்த

பனிக்குடமும்
தன்னை மீறியுடைய
மறுத்திருக்கும்

இல்லை -
வற்றிக் கறுத்திருக்கும்.

ஸீ ஸீ...
சீச்சீ  உன் பிறப்பு!

    - ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுக நரகச் சொர்க்க காலம்




கண்மணி,

உன்
உலகம் ஒளிரக்
காத்திருந்துதான்

விரிந்திருக்கிறது...

சுருங்கிக் கொண்டிருந்த
உன் தாய் உலகம்.

முகம் கழுகிப்
பவுடரடித்த நிலை
தலைகீழாகி

பவுடர் அடித்து
முகம் கழுவிய
பைத்தியம் போலத்தான்
கரைந்திருக்கிறது...

உனக்கான
அவளது ஈரைந்து
மாத காலம்.

கண்மணி,
இக்காலம்...

பசி
ஒரு பருக்கை விடாமல்
அவளைச் சாப்பிட்டதோர்
கலிகாலம்.

ஆனாலும் அதுவேதான்
அவளுக்கென்றிருந்த
கனாக்காலம்.

அவளது படுக்கைகூட
முட்களால் வேயப்பட்டு..

தூக்கத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறிருந்த
துக்க காலமும்தான் அது.

அச்சம்
அவள் ஆடை தாண்டி
வந்தணைத்திருந்த
குளிர்காலமும்தான்.

குழந்தையைச் சுமக்குமோர்
குழந்தையாகவே

அலறும் மனசோடு...

எப்போதும்
கடவுளின் காலடி தேடி
ஒருக்களித்துப் படுத்திருந்த
இந்தக் கர்ப்ப காலம்

அவள் வாழ்விலோர்
சுக நரகச் சொர்க்க காலம்.

மகளே...
மலரிதழே...

ஒளிரும் நிலவே
கண்மணி,

உனக்கானதோர்
எதிர்காலத்தில் புரியக்கூடும்

உயிர் துடிக்கத் துடிக்க
இறந்து பிறந்தவுன் தாயின்
உயிர்ப்பான கடந்த காலம்.

அதுவரையில்,
எக்காலமும்

எந்த யுத்த காலமும்
உணர்த்தப் போவதில்லை
அவளது பிரசவ காலத்தை.

_ ரிஸ்கி ஷெரீப்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

அப்பா ஞாபகம்

வெளிச்சம்
வற்றிச் செத்த

நீண்ட சாலைகளை
விடவும்

இருட்டும் பயமும்
ஒருசேரத் துரத்தும்

சந்துகளிலும்
வளைவுகளிலும்தான்

அதிகமாக
அப்பா ஞாபகம் வருகிறது

வீட்டுக்குச்
சற்றுத் தொலைதூரம்

இரவில் தனித்து வந்த
குழந்தைக்கு.

_ ரிஸ்கி ஷெரீப்.

இனவாதப் பாம்புகளின் முடிவு



முள்ளிவாய்க்காலில்
படமெடுத்தாடிய மமதையில்

மதங்களின் மாரில்
கொத்தித் திரியத் துணிந்திருக்கும்

இனவெறிப் பாம்புகளும்

எங்கேயோயிருந்து

காத்திருந்து பார்த்திருந்து
பறந்துவரும்

இராட்சதப் பருந்தொன்றின்
பாதங்களுக்குக் கீழ் 

ஒருநாள்

தம் கழுத்தில் மிதிபட்டு
நசுங்கிச் சாகும்.

_ ரிஸ்கி ஷெரீப்.

வைரஸ்

மடிகணனியில் உன் படத்தைப்
பதிவேற்ற விழைகையில்

மனசைத் தாக்கிற்று வைரஸ்!
- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

சந்தோசிக்கும் காற்று


Photo: கயவர்கள் காமுகர்கள்
கொடூர ஆட்சியாளர்கள்

செத்துத் தொலைவதில்
சந்தோசிக்கிறது...

அதுவரை அவர்களில்
உயிராக சிறைப்பட்டு
சித்திரவதைப்பட்ட
காற்று.

    - ரிஸ்கி ஷெரீப்.
கயவர்கள் காமுகர்கள்
கொடூர ஆட்சியாளர்கள்

செத்துத் தொலைவதில்
சந்தோசிக்கிறது...

அதுவரை அவர்களில்
உயிராக சிறைப்பட்டு
சித்திரவதைப்பட்ட
காற்று.

- ரிஸ்கி ஷெரீப்.


சனி, 29 ஜூன், 2013

கவிதைகளின் தேடல்



கவிதைகள்
அலைந்து
கொண்டிருக்கின்றன

காற்றில்
அறைபட்டுக் கசங்கி...

இரவுப் பனியில்
குளிர்ந்தொடுங்கி...

வெயிலில்
கறுத்துக் காய்ந்து...

மழையில் குடையின்றி
நனைந்து...

நிர்வாணமாக
அலைந்து
கொண்டிருக்கின்றன
கவிதைகள்

காட்டிலும்
மேட்டிலும்

பாலையிலும்
சோலையிலும்

கடலுக்கும்
வானுக்குமிடையிலான
ஆகாயவெளி
முழுக்கவும்

பசி பிடித்தும்
மதம் பிடித்தும்
வெறி பிடித்தும்

காதல் கசிந்து
தோள் சாய்ந்து
அழுது புலம்பவும்

கட்டியணைத்துக்
கடித்துக் குதறி
காமம் தணிக்கவும்

சமூகச்
சோகமுரைத்துக்
கடனும் பழியும்
தீர்க்கவும்...

அலைந்து
கொண்டிருக்கின்றன
இன்னும் எழுதப்படாத
அழகான கவிதைகள்

தம்மையலங்கரித்து
உடுத்திப் பார்க்கவும்
எடுத்தாளவும்
தெரிந்ததோர்

கவிதைக்காரனையோ
கவிதைக்காரியையோ தேடி.
- ரிஸ்கி ஷெரீப்.

ஹலோ...

Photo: ஹலோ...

உனக்கு அழத்தோன்றும்
ஓர் நாளில்
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
சிரிக்க வைக்க மாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தழ முடியும்.
.......

உனக்கு
தூரத்தேயெங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஓர் நாளிலும்
அச்சமுதறி 
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
நின்றுவிடக் கேட்கமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தோடிவர முடியும்
.......

உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
என்னை அழை...

சத்தியமாக
நான் இரைந்து
பேசமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
மவுனம் காக்க முடியும்
.......

ஆனால்,
நீயாக அழைக்குமோர் நாளில்
என்பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்...

வேகமாக வந்து
என்னைப் பார்

சேர்ந்தழவோ
சேர்ந்தோடவோ
இல்லை
மவுனமாக விழிபார்த்து
அமர்ந்திருக்கவோ

அன்றைக்கு
என் தேவை
நீயாக இருக்கலாம்.

(2001 ஜனவரி மாதம் நான் பொறுப்பாசிரியராக இருந்த செந்தூரம் (தினகரன் வாரமஞ்சரி)இதழில் எழுதிய கவிதை.


உனக்கு அழத்தோன்றும்
ஓர் நாளில்
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
சிரிக்க வைக்க மாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தழ முடியும்.
.......

உனக்கு
தூரத்தேயெங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஓர் நாளிலும்
அச்சமுதறி
என்னை அழை...

சத்தியமாக நானுன்னை
நின்றுவிடக் கேட்கமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
சேர்ந்தோடிவர முடியும்
.......

உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
என்னை அழை...

சத்தியமாக
நான் இரைந்து
பேசமாட்டேன்

நிச்சயமாக என்னாலும்
மவுனம் காக்க முடியும்
.......

ஆனால்,
நீயாக அழைக்குமோர் நாளில்
என்பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்...

வேகமாக வந்து
என்னைப் பார்

சேர்ந்தழவோ
சேர்ந்தோடவோ
இல்லை
மவுனமாக விழிபார்த்து
அமர்ந்திருக்கவோ

அன்றைக்கு
என் தேவை
நீயாக இருக்கலாம்.

( நான் பொறுப்பாசிரியராக இருந்த செந்தூரம் (தினகரன் வாரமஞ்சரி)இதழில்
2001 ஜனவரி மாதம் எழுதிய கவிதை.)

தனிமை தகிக்கிறது... உள்தாமரை அவிகிறது


தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

காதல் 
அலைவரிசையில்...

மனசுகள் சினுங்கும் 
- காலத்தில்

என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......

தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?

நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......

நான் இப்போது
எனக்கே நானில்லையா?

என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......

உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...

எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......

புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம் 
விழிகள் திறந்தே 
கிடக்கின்றன

வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான் 
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி

சாலையைக் 
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை

அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......

உடைந்து உள்ளே 
நான் 
உயிர்த்திருக்கும்போதே

உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...

நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்

நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...

குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......

என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...

மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...

தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...

உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை 
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.
        
        - ரிஸ்கி ஷெரீப்.


காதல்
அலைவரிசையில்...

மனசுகள் சினுங்கும்
- காலத்தில்

என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......

தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?

நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது

மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......

நான் இப்போது
எனக்கே நானில்லையா?

என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......

உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...

எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......

புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம்
விழிகள் திறந்தே
கிடக்கின்றன

வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான்
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி

சாலையைக்
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை

அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......

உடைந்து உள்ளே
நான்
உயிர்த்திருக்கும்போதே

உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...

நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்

நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...

குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......

என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...

மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...

தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...

உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.

- ரிஸ்கி ஷெரீப்.

வியாழன், 27 ஜூன், 2013

13ஆம் சதி




Photo: 13ஆம் சதி

ஜனநாயகத்தின்
தலை மழிக்கப்பட்டு...

சர்வாதிகாரத்தின்
சவரக்கத்தி முனையில்
உயிரலறத் தவிக்கிறது
13ன் குரல்வளை

சிறுபான்மையின்
உயிர்வளை

அப்படியிருக்க...
பௌத்தத்துக்கு எதிரான
சிலந்தி வலையென்றே
பின்னுகிறார்கள்
சதிவலை

இது -

இறைமை
கிளறிக் கீறிய
இன்னுமோர்
இனச்சுத்திகரிப்பு...

சிறுபான்மைக்
களையெடுப்பு...

ஒரே தேசம்
ஒரே குடை
ஒரே மக்களென,

வார்த்தையினிக்க
அணைத்துக் கொஞ்சி...

மழைப் பெருவெள்ளம்
பார்த்துக் காத்திருந்து
குப்புறத் தள்ளிவிடும்
குள்ளநரித் தந்திரத் 
தாண்டவம்

உப்புக் கரைசலிலும்
அடங்கும் தாகம்
என்கிற விதண்டாவாதம்

யுத்தம் தொலைத்த
துணிவின் அகங்காரம்

சின்னத் தீவின்
சிங்களமய
சிகையலங்காரம்

சிறுகட்சித் துவேஷிகளின்
சுயநல இருப்புக்கான
சில்வண்டு ரீங்காரம்

இனவாத வக்கிரத்தின்
இன்னுமோர் அடையாளம்
              (தொடரும்)


ஜனநாயகத்தின்
தலை மழிக்கப்பட்டு...

சர்வாதிகாரத்தின்
சவரக்கத்தி முனையில்
உயிரலறத் தவிக்கிறது
13ன் குரல்வளை

சிறுபான்மையின்
உயிர்வளை

அப்படியிருக்க...
பௌத்தத்துக்கு எதிரான
சிலந்தி வலையென்றே
பின்னுகிறார்கள்
சதிவலை

இது -

இறைமை
கிளறிக் கீறிய
இன்னுமோர்
இனச்சுத்திகரிப்பு...

சிறுபான்மைக்
களையெடுப்பு...

ஒரே தேசம்
ஒரே குடை
ஒரே மக்களென,

வார்த்தையினிக்க
அணைத்துக் கொஞ்சி...

மழைப் பெருவெள்ளம்
பார்த்துக் காத்திருந்து
குப்புறத் தள்ளிவிடும்
குள்ளநரித் தந்திரத்
தாண்டவம்

உப்புக் கரைசலிலும்
அடங்கும் தாகம்
என்கிற விதண்டாவாதம்

யுத்தம் தொலைத்த
துணிவின் அகங்காரம்

சின்னத் தீவின்
சிங்களமய
சிகையலங்காரம்

சிறுகட்சித் துவேஷிகளின்
சுயநல இருப்புக்கான
சில்வண்டு ரீங்காரம்

இனவாத வக்கிரத்தின்
இன்னுமோர் அடையாளம்
(தொடரும்)

திங்கள், 22 ஏப்ரல், 2013

நிதானம்


Photo: நிதானம்

விரல் நொடிக்கும்
பொழுதில்

விரக்தியின்
விளிம்பிலிருந்து

நழுவிவிடத்
துடிக்கின்றன

துயர் பருகிக்
களைத்த கால்கள்

உட்கார்ந்து
ஓய்வெடுக்க
 
அடம்பிடிக்கிறது
மனசு.

     - ரிஸ்கி ஷெரீப்.


விரல் நொடிக்கும்
பொழுதில்

விரக்தியின்
விளிம்பிலிருந்து

நழுவிவிடத்
துடிக்கின்றன

துயர் பருகிக்
களைத்த கால்கள்

உட்கார்ந்து
ஓய்வெடுக்க

அடம்பிடிக்கிறது
மனசு.

- ரிஸ்கி ஷெரீப்.

ஹைக்கூ


Photo: ஹைக்கூ

கருப்பாயிகளும்
வள்ளியம்மைகளும்
ஹைக்கூக்கள்தான்

முருகேசன்களுக்கும்
முனுசாமிகளுக்கும்.

    - ரிஸ்கி ஷெரீப்.


கருப்பாயிகளும்
வள்ளியம்மைகளும்
ஹைக்கூக்கள்தான்

முருகேசன்களுக்கும்
முனுசாமிகளுக்கும்.

- ரிஸ்கி ஷெரீப்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வியர்வைக்கும் மனசில்லை


Photo: வியர்வைக்கும் மனசில்லை

உழைப்பின் 
பெருமையை

வியந்திசைக்கத் 
தெரிந்த

வியர்வைத் 
துளிகளுக்கும்

விரும்பி 
இசைக்கத்தான்
மனசில்லை

குளிர் 
கரைந்தழுது
வைத்த ஒப்பாரியை.

   - ரிஸ்கி ஷெரீப்.


உழைப்பின்
பெருமையை

வியந்திசைக்கத்
தெரிந்த

வியர்வைத்
துளிகளுக்கும்

விரும்பி
இசைக்கத்தான்
மனசில்லை

குளிர்
கரைந்தழுது
வைத்த ஒப்பாரியை.

- ரிஸ்கி ஷெரீப்.

சனி, 20 ஏப்ரல், 2013

தளம்பல்


Photo: தளம்பல்

முதிர்கன்னி
எடுத்து வந்த
குடத்தில்

தங்கிவிடத்
தவிர்த்துத்

தளம்பத்
துடிக்கிறது

நாதியற்று
தெருவோரக்
குழாய்

அழுதுதிர்த்த
கண்ணீர்.

     - ரிஸ்கி ஷெரீப்.


முதிர்கன்னி
எடுத்து வந்த
குடத்தில்

தங்கிவிடத்
தவிர்த்துத்

தளம்பத்
துடிக்கிறது

நாதியற்று
தெருவோரக்
குழாய்

அழுதுதிர்த்த
கண்ணீர்.

- ரிஸ்கி ஷெரீப்.

காத்திருக்கும் மழை



Photo: காத்திருக்கும் மழை

மலர்விழியாள்
குடை தர
மறுத்ததில்

வெடித்தழுது
பொழியக்
காத்திருக்கிறது

மழலை 
விழியோரம்
ஓர் மழை.

   - ரிஸ்கி ஷெரீப்.

மலர்விழியாள்
குடை தர
மறுத்ததில்

வெடித்தழுது
பொழியக்
காத்திருக்கிறது

மழலை
விழியோரம்
ஓர் மழை.

- ரிஸ்கி ஷெரீப்.

கல்வியழுகை




Photo: கல்வியழுகை

சுவர் சாய்ந்து
வெட்கித்தொளிந்து
அழுகிறது

ஏழை
கைக்கெட்டாமல்

பணக்காரச் சிறார்
பைகளில் நசுங்கித்
திணிந்தலையும்

எச்சில் காசுக்கு
விலைபோன
ஏற்றமிகு கல்வி.

    - ரிஸ்கி ஷெரீப்.



சுவர் சாய்ந்து
வெட்கித்தொளிந்து
அழுகிறது

ஏழை
கைக்கெட்டாமல்

பணக்காரச் சிறார்
பைகளில் நசுங்கித்
திணிந்தலையும்

எச்சில் காசுக்கு
விலைபோன
ஏற்றமிகு கல்வி.

- ரிஸ்கி ஷெரீப்.

நடிப்பு



நடிகை
முதுகுக்கும்
தெரிந்திருக்கிறது...

அழகாய்
அரிதாரமுடுத்தி
நடிக்க.

     - ரிஸ்கி ஷெரீப்.