மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுக நரகச் சொர்க்க காலம்




கண்மணி,

உன்
உலகம் ஒளிரக்
காத்திருந்துதான்

விரிந்திருக்கிறது...

சுருங்கிக் கொண்டிருந்த
உன் தாய் உலகம்.

முகம் கழுகிப்
பவுடரடித்த நிலை
தலைகீழாகி

பவுடர் அடித்து
முகம் கழுவிய
பைத்தியம் போலத்தான்
கரைந்திருக்கிறது...

உனக்கான
அவளது ஈரைந்து
மாத காலம்.

கண்மணி,
இக்காலம்...

பசி
ஒரு பருக்கை விடாமல்
அவளைச் சாப்பிட்டதோர்
கலிகாலம்.

ஆனாலும் அதுவேதான்
அவளுக்கென்றிருந்த
கனாக்காலம்.

அவளது படுக்கைகூட
முட்களால் வேயப்பட்டு..

தூக்கத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறிருந்த
துக்க காலமும்தான் அது.

அச்சம்
அவள் ஆடை தாண்டி
வந்தணைத்திருந்த
குளிர்காலமும்தான்.

குழந்தையைச் சுமக்குமோர்
குழந்தையாகவே

அலறும் மனசோடு...

எப்போதும்
கடவுளின் காலடி தேடி
ஒருக்களித்துப் படுத்திருந்த
இந்தக் கர்ப்ப காலம்

அவள் வாழ்விலோர்
சுக நரகச் சொர்க்க காலம்.

மகளே...
மலரிதழே...

ஒளிரும் நிலவே
கண்மணி,

உனக்கானதோர்
எதிர்காலத்தில் புரியக்கூடும்

உயிர் துடிக்கத் துடிக்க
இறந்து பிறந்தவுன் தாயின்
உயிர்ப்பான கடந்த காலம்.

அதுவரையில்,
எக்காலமும்

எந்த யுத்த காலமும்
உணர்த்தப் போவதில்லை
அவளது பிரசவ காலத்தை.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: