எங்கேயிருக்கிறாய்?

எங்கேயிருக்கிறாய்?
எந்தத் திசை?
எத்தனை தொலை தூரம்?
காலத்துக்கும் சொல்லத்
தவித்துத் தோற்ற
என் காதலைப்போலச் சுகமானதோர்
மிதமற்ற குளிர் தேசமா?
சதாவும் வியர்வை உடல்
குடிக்கத் துடிக்கும் முரட்டுப் பாலையா?
இல்லை...
அச்சம் அச்சாணியடித்ததோர் நாட்டின்
இடிபாட்டுக் கட்டிடங்களில் ஏதோவொன்றா?
எங்கேயிருக்கிறாய்?
நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
உன் தேசத்தில்
உன்னைத் தவிர எல்லோரும் இருக்கிறார்கள்
கனவுகளுக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியில்
அவ்வப்போது பருந்துகளும் பறக்கின்றன
ஒடிந்து விடாத சிறு கிளைகளில் நின்று
அழகான ஜோடிக் கிளிகள் அவ்வப்போது
முத்தமிட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்
காலம் வெகுவாய் மாறியிருக்கிறது
- உன்னைப்போல
காதல் மட்டும் அதன்பாட்டுக்கு
அப்படியேதானிருக்கிறது...என்னைப்போல
எல்லாம் சரி கண்மனி...
இப்போது எங்கேயிருக்கிறாய்?
துயர் நூலெடுத்துப் பின்னிய வலைகள்
சகிதமானதோர் ஒட்டடைச் சூழலா?
இல்லை...
மருதாணிக் கைகளும் மணக்கும் மஞ்சமுமான
மகிழ்ச்சி வலயத்துக்குள் தாபிக்கப்பட்டதோர்
மொசைக்தரை மாளிகையா?
நீ விலகி நடந்த தூரம்
உன்னையெங்கே வைத்திருக்கிறதென்று
இற்றைக்கும் தெரியவில்லைதான்
ஆனால்
எனக்குள் மட்டும் எப்போதும்போல
அப்படியேதான் இருக்கிறாய்...
கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியானதோர்
தனித்த தொட்டியின் ஊதாநிறப் பூச்செடிபோல.
_ ரிஸ்கி ஷெரீப்.
25/10/2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக