இன்று செப். 16, மர்ஹூம் அஷ்ரப்பின் 12வது நினைவு தினத்தையொட்டி...
சிறகு விரித்துச் சென்றிருந்த
தேர்தல் விழாவின்
இதழ்களில் அமர்ந்த நேரம்
இனிமையான வஸ்துக்கள்
அருகிவரும் இந்நாளில்
எண்ணச் சுவர்களில்
சிதைவுகள் தந்து
அன்பெனும்
ஆணிவேர் உசுப்பி
அறிவின் கிளைகளில்
நிரந்தரக் கண்ணீர் தந்து
போனவனே...
சுகமாய்ச் சும்மாயிருந்த
நுரையீரலுக்கு
சுவாசத்தைச் சொல்லிக்
கொடுத்தவனே...
எமது உயிரின்
உயிருக்குயிரான
அமைச்சரே...அஷ்ரபே...
காணாமல்போன எம்மைக்
கண்டெடுத்து மீட்டெடுக்காமல்
எம்மில் காணாமல்போன
உனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்
நாமாகிவிட்ட
நானையும் நீயையும் நண்பர்களாக்கி
நொடிகளை வாழ்வித்தபடி
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தவனே...
மார்புக்குள் நெஞ்சில்லா
மடச்சமூகம் அழித்தொழிக்க
மரச் சின்னத்தோடு வந்தவனே...
நீ மரம் தரித்தே
சென்ற மாயமென்ன?
மலைத்தொடர்கள்
தொப்பியணிந்திருந்த
பனிப்போர்வைக் குளிரில்
வெடவெடத்துக் குளிர்காய
வந்த நெருப்போ உனை
உருமாற்றிச் சென்றது? சொல்...
யுத்த பூமியில்
வாழ்வாசை தோற்கப்
போராடியவனே...
உள்ளுக்குள் நடந்த
யுத்தத்திலும்
உன் வாழ்வாசை தோற்றதோ?
மருத்துவத்தையே மருதலித்து
அகன்று சென்ற மாயமென்ன?
ஒப்பில்லாச் செப்பமொன்று
உடம்பணிந்து வந்த மாதிரி...
கண்டவுடன்
கைகூப்பக் கட்டளையிடும்
கம்பீரங்களங் கனிந்த முகம்
பளிச்சுப் பளிச்செனப்
பழுதில்லாப் பேச்சு
அழுக்கறியா அகம் முழுதும்
பளிங்கைத் தோற்கடிக்கும்
பளபளப்புத் தூய்மை
அகத்துள் தூய்மையால்
அந்தந்த நொடிகளில்
குழந்தைபோல் குதூகலம்
எல்லாம் மறக்கடித்துப் போனவனே,
நீ போயிருக்கலாம்...
எம் ஞாபகங்களையும்
எடுத்துப் போயிருக்கலாம்.
வேர் ஆகிப்போக வேண்டிய
நீயோ வேறாகிப் போனாய்...
எம் வழிநெடுகவும்
வழுக்குச் சேறாகிப்போக.
இப்போதெல்லாம்
தின்பதை உணவென்கிறார்கள்
திளைப்பதை நுகர்வென்கிறார்கள்
வாழ்க்கை வியக்கிறது
சப்தத்தை இசையென்கிறார்கள்
ஆசையை அன்பென்கிறார்கள்
வாழ்க்கைக்கு வியர்க்கிறது
பிழைப்பதை வாழ்வென்கிறார்கள்
எல்லாமே எனதென்கிறார்கள்
வாழ்க்கைக்கு வலிக்கிறது
சாதிகளினால் ஆன
சமுதாயம் கட்டி
மதங்களால் ஆன
மானுடம் நடித்து
எல்லோரும்
தங்கள் கூத்தை
தாமே ரசிக்கிறார்கள்
எப்படியோ...நீயில்லாததில்
கனாக்களைத் தின்றுவிட்டு
இராக்களை விழிக்கிறார்கள்
அந்நேரமெல்லாம்...
எம்மோடு சேர்த்து
வாழ்க்கைக்கும் சுரக்கிறது
கண்ணீர்!
- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
(செப்.24-30,2000 தினகரன்/செந்தூரம் இதழில் எழுதிய கவிதை.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக