மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 5

      [ஐந்தாவது அங்கம்]


உயிரலறுகையில்
எழும் -
தொண்டைக்குழி
விக்கலானது
- வாழ்க்கை.

சங்கு ஊதி
சடங்குகள்
அடங்கியும்
முடங்கியேயிருந்தாள்
- பஞ்சவர்ணம்.

வறுமை
அழியாக் -
கரு' மை' யா?

இல்லை
அழிக்கும் -
கந்துவட்டிக் கடனா?

இவள் குடிசை
விலாசம் -
தேடியலையாமல்
அழையாமல்
வந்தமர்ந்து
- கொண்டது.

பரிதாபம்
உணரத் தெரியாத
கல்நெஞ்சுக்காரன்...

படுத்திய பாட்டில்
எழுந்து -
உயிரிழந்து
ஓடத் துணிந்தவளை,

அணைத்து
அமர்த்தியது
' தாமரை'.

பாசத்தைப்
பச்சை குத்திய
பச்சை மண்.

நரகத்திலாயினும்
வாழச்சொன்ன
- சொர்க்கம்.

அதன் -
மழலைச் சிரிப்பில்
இவள் முலையிலன்றி
வயிற்றில் -
பால் சுரந்தது.

மூச்சுத் திணறத்
திமிறிய பசியில்
அச்சம் பிதுங்கியது.

அடுப்பங்கரையில்
பூனை சுருண்டது.

பஞ்சம் பிழைக்கத்
துணிந்தாள் -
பஞ்சவர்ணம்.

செங்கல் சூளைச்சேறு
தன்னை மிதிக்கக்
கூப்பிட்டது.

வறுமை உதிர்க்கக்
கூப்பிட்டது.

முருகேசு
மூச்சு விட்டயிடத்தின்
வாசம் பிடித்துழைக்கக்
- கூப்பிட்டது.

கண்கள் குளமாகக்
குளிர்ந்து -
நடை தளர்ந்து
ஓடினாள்.

-------   --------   --------  ---------

சூளையைப்போல
அதன் -
சொந்தக்காரனுக்கும்
தீயும் -
சேறுமான மனசு.

தனித்திருந்ததோர்
மழை பிடித்த
மாலையில்
சனி பிடித்தது.

அலறலை அடக்கிய
இடியின் பிடிக்குள்...

சாராய -
நெடியுடன் கூடிய
இரும்புப் பிடிக்குள்...

காமத் தீப்பிழம்புகளில்
கசங்கிக் -
கருகியெரிந்தது
அந்த வெண்பஞ்சு.
[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
16.11.2009

கருத்துகள் இல்லை: