[நான்காவது அங்கம்]
தாலி கேட்ட
வைர மூக்குத்திக்கு
தன்னையே கொடுத்தது
அந்தக் -
கறுப்புத்தங்கம்.
அம்மி மிதித்து
அருந்ததி -
பார்த்துச்செய்த
திருமணம்தான்...
மணத்த -
மணவாழ்வு
இனித்ததில்...
இருவரும்
சமபங்கில் ருசித்த
இரவுகள்
வெட்கித்தன.
ஒருசேர -
முத்துக் குளித்ததில்
மலர்ந்தது
ஒற்றைத் ' தாமரை '.
இருபாலில் முளைத்த
பெண்பால் முத்து.
அவர்கள் -
அவர்களுக்குள்
புதைந்து தேடிக்
- கண்டெடுத்த
புதையல்.
விரல் நொடிக்கக்
காலம் கரைந்து...
தவழ்ந்தது ' தாமரை'.
யார் -
கண்பட்டு
எந்த -
வயிறெரிந்ததோ?
செய்வினைகள்
பலித்து -
சூனியக் கல்
தெறித்ததோ?
ஒருநாள்,
விதி -
சதி செய்த
விபத்தில்...
ஆணியறைந்து
அடங்கியது
அவர்களில் -
இழையோடியிருந்த
-காதல்.
காலையில்
செங்கல் சூளைக்குச்
சென்ற -
கறுப்புத்தேக்கை
மாலையில்
கரிக்கட்டையாகச்
சுமந்து வந்தன
சில மரக்கட்டைகள்.
கட்டழகன் முருகேசை
சுட்ட கருவாடாக
மொழிபெயர்த்துத்
தப்பியிருந்த
சாத்தான்...
பஞ்சவர்ணத்தின்
நெஞ்சு பிரித்துக்
குருதி புசித்தது.
.
காதலுக்குக்
கடன்பட்டவளாய்
உடன்கட்டை
ஏறத்துடித்தது
சந்தனக்கட்டை.
தடுக்கிவிழத்
தடுத்தது -
' தாமரை 'த் துடிப்பும்
அதன் -
கன்னக்குழிச் சிரிப்பும்.
[தொடரும்]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
10.11.2009

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக