மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 7 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 3

 [மூன்றாவது அங்கம்]


முறுக்கு மீசையும்
முறுக்கேறிய தேகமும்
கறைபடியாத -
மனசுமாயிருந்த
கறுப்பழகன்தான்
முருகேசன்.

பூவிலங்கு முரளியைக்
கடைந்தெடுத்த -
செங்கல் சூளையில்
வெந்துழைக்கும்
தொழிலாளி.

மலையோரம் நதியோரம்
வயலோரம் வைக்கோல்
- குமியலோரமெல்லாம்...

கண்ணி வைத்துக்
காதல் வலைவீசிய
கன்னிகளிடமிருந்து
நழுவிக்கொண்டிருந்த
இந்த மீன்...

மணமான
மலைக்காட்டு மனுசிகளின்
மோக அலையிலேயினும்
எப்போதும்
அடிபட்டுப் போனதில்லை.

தவிர்க்கத் தவிர்க்கத்
துளிர்த்த
தவிப்பில்...

காமமிழைந்த இரவுகளில்
கணவன் நுகர்கையில்
இவனையுணர்ந்து
சுகித்த பெண்களும்
இங்கு அதிகம்.

எனினும்
உளியில் துளையாத
இரும்பு -
` பனியில் கரைந்தது.

காதல் எறும்பூறிக்
கற்குழிந்து
குளிர்ந்தான்
கற்புக்கரசன்.

அவையின்
முரட்டுச்
சப்தமொடுக்கிய
கொலுசுச் சங்கீதமாய்...

மலட்டுப் பெண்
வயிற்றில் தங்கிய
மகவாய்...

காட்டாற்று
வெள்ளத்தையும்
மறித்துப் போட்டது
தாவணி அணை.

பஞ்சவர்ணம்
கிறுக்கிய சித்திரத்தை
இந்தக் -
கறுப்புத் தேக்கு
தன்னில்
செதுக்கிக் கொண்டது.

மயக்கும் மாலை
வெயிற்பொழுதுச்
சந்தையிலொருநாள்...

ஆசையாய்
வளையல் வாங்கிக்
கொடுத்த முருகேசின்
மீசை வருடி...

அவன் மார்
மயிர்த்தோப்பில்
முகம் புதைத்து...

குங்குமம் தெறிக்கும்
சிவப்பில்
நாணம் நனையக்
கேட்டாள் பஞ்சவர்ணம்
'' வளையல் மட்டுமா
கழுத்துக்குத் -
தாலி தரமாட்டாயா?"
                [தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
07.11.2009

கருத்துகள் இல்லை: