மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 5

      [ஐந்தாவது அங்கம்]


உயிரலறுகையில்
எழும் -
தொண்டைக்குழி
விக்கலானது
- வாழ்க்கை.

சங்கு ஊதி
சடங்குகள்
அடங்கியும்
முடங்கியேயிருந்தாள்
- பஞ்சவர்ணம்.

வறுமை
அழியாக் -
கரு' மை' யா?

இல்லை
அழிக்கும் -
கந்துவட்டிக் கடனா?

இவள் குடிசை
விலாசம் -
தேடியலையாமல்
அழையாமல்
வந்தமர்ந்து
- கொண்டது.

பரிதாபம்
உணரத் தெரியாத
கல்நெஞ்சுக்காரன்...

படுத்திய பாட்டில்
எழுந்து -
உயிரிழந்து
ஓடத் துணிந்தவளை,

அணைத்து
அமர்த்தியது
' தாமரை'.

பாசத்தைப்
பச்சை குத்திய
பச்சை மண்.

நரகத்திலாயினும்
வாழச்சொன்ன
- சொர்க்கம்.

அதன் -
மழலைச் சிரிப்பில்
இவள் முலையிலன்றி
வயிற்றில் -
பால் சுரந்தது.

மூச்சுத் திணறத்
திமிறிய பசியில்
அச்சம் பிதுங்கியது.

அடுப்பங்கரையில்
பூனை சுருண்டது.

பஞ்சம் பிழைக்கத்
துணிந்தாள் -
பஞ்சவர்ணம்.

செங்கல் சூளைச்சேறு
தன்னை மிதிக்கக்
கூப்பிட்டது.

வறுமை உதிர்க்கக்
கூப்பிட்டது.

முருகேசு
மூச்சு விட்டயிடத்தின்
வாசம் பிடித்துழைக்கக்
- கூப்பிட்டது.

கண்கள் குளமாகக்
குளிர்ந்து -
நடை தளர்ந்து
ஓடினாள்.

-------   --------   --------  ---------

சூளையைப்போல
அதன் -
சொந்தக்காரனுக்கும்
தீயும் -
சேறுமான மனசு.

தனித்திருந்ததோர்
மழை பிடித்த
மாலையில்
சனி பிடித்தது.

அலறலை அடக்கிய
இடியின் பிடிக்குள்...

சாராய -
நெடியுடன் கூடிய
இரும்புப் பிடிக்குள்...

காமத் தீப்பிழம்புகளில்
கசங்கிக் -
கருகியெரிந்தது
அந்த வெண்பஞ்சு.
[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
16.11.2009

செவ்வாய், 10 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 4



       [நான்காவது அங்கம்]


தாலி கேட்ட
வைர மூக்குத்திக்கு
தன்னையே கொடுத்தது
அந்தக் -
கறுப்புத்தங்கம்.

அம்மி மிதித்து
அருந்ததி -
பார்த்துச்செய்த
திருமணம்தான்...

மணத்த -
மணவாழ்வு
இனித்ததில்...

இருவரும்
சமபங்கில் ருசித்த
இரவுகள்
வெட்கித்தன.

ஒருசேர -
முத்துக் குளித்ததில்
மலர்ந்தது
ஒற்றைத் ' தாமரை '.

இருபாலில் முளைத்த
பெண்பால் முத்து.

அவர்கள் -
அவர்களுக்குள்
புதைந்து தேடிக்
- கண்டெடுத்த
புதையல்.

விரல் நொடிக்கக்
காலம் கரைந்து...
தவழ்ந்தது ' தாமரை'.

யார் -
கண்பட்டு
எந்த -
வயிறெரிந்ததோ?

செய்வினைகள்
பலித்து -
சூனியக் கல்
தெறித்ததோ?

ஒருநாள்,

விதி -
சதி செய்த
விபத்தில்...

ஆணியறைந்து
அடங்கியது
அவர்களில் -
இழையோடியிருந்த
-காதல்.

காலையில்
செங்கல் சூளைக்குச்
சென்ற -
கறுப்புத்தேக்கை
மாலையில்
கரிக்கட்டையாகச்
சுமந்து வந்தன
சில மரக்கட்டைகள்.

கட்டழகன் முருகேசை
சுட்ட கருவாடாக
மொழிபெயர்த்துத்
தப்பியிருந்த
சாத்தான்...

பஞ்சவர்ணத்தின்
நெஞ்சு பிரித்துக்
குருதி புசித்தது.
.
காதலுக்குக்
கடன்பட்டவளாய்
உடன்கட்டை
ஏறத்துடித்தது
சந்தனக்கட்டை.

தடுக்கிவிழத்
தடுத்தது -
' தாமரை 'த் துடிப்பும்
அதன் -
கன்னக்குழிச் சிரிப்பும்.

                     [தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
10.11.2009

சனி, 7 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 3

 [மூன்றாவது அங்கம்]


முறுக்கு மீசையும்
முறுக்கேறிய தேகமும்
கறைபடியாத -
மனசுமாயிருந்த
கறுப்பழகன்தான்
முருகேசன்.

பூவிலங்கு முரளியைக்
கடைந்தெடுத்த -
செங்கல் சூளையில்
வெந்துழைக்கும்
தொழிலாளி.

மலையோரம் நதியோரம்
வயலோரம் வைக்கோல்
- குமியலோரமெல்லாம்...

கண்ணி வைத்துக்
காதல் வலைவீசிய
கன்னிகளிடமிருந்து
நழுவிக்கொண்டிருந்த
இந்த மீன்...

மணமான
மலைக்காட்டு மனுசிகளின்
மோக அலையிலேயினும்
எப்போதும்
அடிபட்டுப் போனதில்லை.

தவிர்க்கத் தவிர்க்கத்
துளிர்த்த
தவிப்பில்...

காமமிழைந்த இரவுகளில்
கணவன் நுகர்கையில்
இவனையுணர்ந்து
சுகித்த பெண்களும்
இங்கு அதிகம்.

எனினும்
உளியில் துளையாத
இரும்பு -
` பனியில் கரைந்தது.

காதல் எறும்பூறிக்
கற்குழிந்து
குளிர்ந்தான்
கற்புக்கரசன்.

அவையின்
முரட்டுச்
சப்தமொடுக்கிய
கொலுசுச் சங்கீதமாய்...

மலட்டுப் பெண்
வயிற்றில் தங்கிய
மகவாய்...

காட்டாற்று
வெள்ளத்தையும்
மறித்துப் போட்டது
தாவணி அணை.

பஞ்சவர்ணம்
கிறுக்கிய சித்திரத்தை
இந்தக் -
கறுப்புத் தேக்கு
தன்னில்
செதுக்கிக் கொண்டது.

மயக்கும் மாலை
வெயிற்பொழுதுச்
சந்தையிலொருநாள்...

ஆசையாய்
வளையல் வாங்கிக்
கொடுத்த முருகேசின்
மீசை வருடி...

அவன் மார்
மயிர்த்தோப்பில்
முகம் புதைத்து...

குங்குமம் தெறிக்கும்
சிவப்பில்
நாணம் நனையக்
கேட்டாள் பஞ்சவர்ணம்
'' வளையல் மட்டுமா
கழுத்துக்குத் -
தாலி தரமாட்டாயா?"
                [தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
07.11.2009

வியாழன், 5 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 2

 [இரண்டாவது அங்ம்]


ஞ்சவர்ணம்...

பாரதிராஜா
கொத்திப்போகத் தவறிய
பாரிஜாதம்.

புறத்தோலுரிந்த
மரவள்ளி நிறத்தில்...

கொவ்வையிதழ் மேல்
நட்சத்திரமாய்
கருமச்சமும்...

காந்தமாய் ஈர்க்கும்
கருவண்டு விழிகளும்...

சிரிக்கையில்
தடுக்கி -
விழத்தோன்றும்
வலக்கன்னக் குழியும்...

பாம்பு -
நெளிந்ததாற்போன்ற
மடிப்புக் கலையாத
ஒடிந்துவிடும
இடையும்...

திமிறித்
திணறும்
மாரும்...

நெய்
குழைத்துச் செய்த
சிலையாய்...

அழகிய பிறப்பின்
அதிசயங்களில்
ஒன்றாய்...

இருபது வயதிலிருந்த
இந்த இனிப்பான
நிலவுக்கு
இன்னுமோர் பெயர்தான்
பஞ்சவர்ணம்.

மலைக்காடே
நுகர்ந்து பார்க்கத்
துடித்த -
கஞ்சாக்காடு.

கிராமத்து
அழகுராணிப்
- போட்டிகளின்
அனைத்துக்
கிரீடங்களையும்
தன் தலைமேல்
அமர்த்திக் கொண்ட
அற்புத அழகி.

அழகிய தீ
வடிவமைத்த
தென்றல்.

இந்தத் தென்றல்
தெருவிறங்கக்
காத்திருந்து -
முளைக்கும்
யன்னல் விழிகள்...

தம் மனசுக்குள்
அசிங்கம் செய்து
தடுமாறிய போதும்,

தடம் மாறாமல்
நிறம் மாறாமல்
இருந்த
வைர மூக்குத்திதான்
இந்தப்
பஞ்சவர்ணம்.

இருந்தபோதும்...

இந்த
வைர மூக்குத்தியை
தன் உயிரில்
உயில் எழுதிக்கொண்டது
ஒரு -
கறுப்புத் தங்கம்.

மலைக்காட்டில்
விளைந்த -
இருபத்தி நான்கு
வயதுச் சொக்கத்தங்கம்.

செங்கல் சூளைக்கு
மண் மிதிக்கச்
சென்றவளை மீறி
ஏறி மிதித்து
அமர்ந்து கொண்ட
- காதல்...

கடைசிவரைக்கும்
அவளைக்
குப்புறப்படுத்தியேதான்
க்ருக்கொண்டது.

[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
05.11.2009

செவ்வாய், 3 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 1

[முதலாவது அங்கம்]



ந்த -
அழகிய கிராமத்தை
மசக்கைப் பெண்ணாக
உட்கார வைத்த-
நெடுநாள் மழையை
எடுத்துச் சென்றது
நடுநிசியிரவுக்
காற்று.

ஊரையே
கழுவித் துவைத்த
மழையின் சுவடுகளையும்
வந்த வேகத்திலேயே
துடைக்க முயன்று
தோற்றுமிருந்தது.

அரிதாரம் பூசாத
ஊருக்குள்-
அழையாமலாயினும்
பகல் விருந்தாளியாய்
நுழைந்த மழை...

' அந்த ஏழு
நாட்களுக்குப்' பிறகும்
ஏதோ -
தயக்கம் காட்டித்தான்
போயிருக்கிறது.

ஆரத்தழுவி-
வருடியணைத்து
நனைத்துப் பிரியும்
அற்புத மழை...

இம்முறை -
வெறியாட்டம் போட்டுத்தான்
அடங்கியிருக்கிறது.

நடுவகிடெடுத்து
வாரிய -
வயல்வரப்புக்
கூந்தலையும் கலைத்து...

விரிந்த குடைகளையும்
முள்ளந்தண்டில் உடைத்து...

போதையில் இருந்ததா
- மழை ?

அதன்
மூர்க்கப் பிடிக்குள்
மூச்சுத் திணறித்
தவித்தழுதது
அவ்வழகிய கிராமம்.

மழைக் குளிர்ச்சுகத்தில்
ஊருக்குள் சிலர்
இன்னும் -
தூங்கிப்போயிருந்தார்கள்.

மழைக் குளிர்ச்சோகத்தில்
ஊருக்குள் பலரும்
இன்னும்
பட்டினி கிடந்தார்கள்.

குடலில் பசித்தவர்களுக்கு
மத்தியில்
இந்தக் குளிரில்
உடலில் பசித்தவர்களும்
இருந்தார்கள்.

முதுகுப் பரப்பில்
நகக் கீறல்களை-
வாங்கியிருந்த
பூஞ்செடிகள்
விடிந்த பின்பும் வெட்கித்
தலைகுனிந்திருந்தன.

நாணமாய் -
அவற்றின்
கால் விரல்க் கோலமாய்த்
தெரிந்த புற்கள்மீது
பனி பூப்பூத்திருந்தது.

சின்ன இடைவெளியில்
பாய்ந்த பெருவெள்ளத்தில்
கால்வாய்களுக்கும்
வலியெடுத்திருக்கும்.
.
அவசர அவசரமாய்
அணைத்து முகர்ந்து
ஆலாபனைச்
சுகம் உண்டு
புரண்டு படுக்கும்
ஜடம்போல...

வந்தது
வரமென்று
அனுபவித்த பின்பு,

ஊருக்குள்
தப்பாகப் பேசவும்
ஆரம்பித்திருந்தார்கள்.

எப்படியோ...
' அப்பாடா 'வென்று
இரவோடிரவாக
அடித்து விரட்டியிருக்கிறது
- காற்று.

காதலாய்க் கசிந்துருகிக்
கசங்கி வியர்த்துக்
களைத்துக் குளித்துவந்த
புதுமணப்பெண்போல...

விடிந்து
பார்க்கையிலும்
அழகாய்த்தானிருக்கிறது
மழைக் காடாகிப்போன-
மலைகள்
முக்காடிட்டிருந்த
அந்த-
'மலைக்காட்டு'க் கிராமம்

செம்மண் தரைகளிலும்
மணத்தது -
மழை மிச்சம் வைத்துச்
சென்ற வாசம்.

வானமழுதது
பொறுக்காமல்
தரை தொட்டிறந்திருந்த
இலைகள்-
அழுக ஆரம்பித்திருக்க...

சற்றைக்கு முன்
பஞ்சு மரமுதிர்த்த -
பழுத்துக் காய்ந்த
இலைகளும்
காற்று வெளியிலேயே
கொஞ்சம் -
நின்று நிதானித்துக்
குளிர்காய்ந்துகொண்டன.

சேறு பூசாத
தெருப் பருக்கள்
தாண்டிச் சிலயிடங்களில்
தேங்கியிருந்த
' தெளிந்த நீரில்'
தெரிந்தது
நடுநெற்றியில் இன்னும்
சூரியப்பொட்டு வைக்காத -
கண்ணீர் துடைத்திருந்த
- வானம்.

அழுத களைப்பில்
கொஞ்சம் -
கறுத்துத்தானிருந்தது.

---------   --------   --------   ----------

ர் நனைத்துக்
கூரை வடித்த -
வானக் கண்ணீரைப்
பருகி மாய்ந்த
குடில்களின் கதைகளும்...

மழைக்காலம்
உணர்வெரித்து
உடல் கொதித்துக்
குளிர்ந்த
உடல்களின் கதைகளும்...

இந்த -
மலைக்காட்டுக்
கிராமத்திலுண்டு.

பஞ்சவர்ணக் கதை
இதில்
இரண்டுமான ரகம்.

[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
03.11.2009

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வானமழும் நாளில் குடையெடுத்து வருவாயா?


      
 உயிருக்கு
உயிரூட்டிய
உயிரே...

காற்று
செத்துக்கிடக்கும்
காலங்களில்கூட...

காயக் காய
எச்சில் தடவி
கையகராதிகள்
புரட்டிப் பார்த்தும்
அர்த்தம் புரியவில்லை
உன் மவுனத்திற்கு.

மவுனமாய்
           மறந்துபோகும்
மழை நாட்களில்
எனக்குள் -
மறக்காமல் இருப்பது
நானும் நீயும்
முதல் சந்தித்த
அந்த -
முத்தான ' துளி ' நாள்தான்.

மழை தெறித்துப்
- பரவும்
மண்வாசனைக்குப்
- பதிலாக
இப்போதெல்லாம்
மழை நாட்களில்
அதிகம்
உன் வாசனைதான்.

இயல்பாய் நனைந்து
வந்த எனையுணர்ந்து
இரக்கமேயில்லாமல்
உன்னழகை மட்டும்
ஊதாக் குடைக்குள்
எடுத்து -
என்னை நீ
விட்டுச் சென்றயிடத்தில்
எஞ்சிய வாசம்பிடித்து
சிறுகச் சிறுகச்
சேமித்த காதலிது.

நீ -
சிரித்துவிட்டாவது
போயிருக்கலாம்...
வந்திருக்கலாம்...

கால்போன போக்கில்
நாட்கள் நடக்க
நீயும் போகிறாய்...
வருகிறாய்...
வாழ்வாசையிழந்து
என்னுள் கரையும்
காதலையறியாமல்...

என் வாழ்வில்
அந்த மழைநாள்
வராமலேயே
போயிருக்கலாம்...
இல்லை -
நான் குடையெடுத்து
வந்திருக்கலாம்.

கடற்கரைப் பரப்பில்
கவிகேட்கும்
இயற்கையாய்
என்றென்றும் எனக்குள்
- பறக்கும்
சிறகுகள் இருந்ததில்லை.

படபடக்கும் உன்
ஒரு நிமிடப்
பார்வைப் பொருளை
காதலாய்க் கருதி
மொழிபெயர்த்துக்
கொண்டதில்தான்
சிறகுகள் முளைத்துப்
பரவசம் பெற்றிருக்கிறேன்.

இதயத்தில் உனக்கு
இருக்கை
போட்டிருக்கிறேன்.

வாழ்க்கைக்கு
வாசம் தந்தவளே
நீ வந்தமறாவிட்டாலும்
வறட்சியாய் முறைத்து
எனை -
வெறுத்தொதுக்கிப் போகாதே.

ஏனெனில் -
உயிமூச்சு என்பது
அழுகைக் கடலிலும்
அடிமனத்து சுனாமியிலும்
சட்டென்று அறுபடக்கூடியது.

நீ -
மறந்துவிட்டிருந்தாலும்...
மறக்கமுடியாத
என்னைப்போல்
அந்த -
வானமழுத நாள்தான்
என்னையும் உன்னையும்
சந்திக்க வைத்தது.

என்னை -
உன்பால்
சிந்திக்க வைத்தது.

அப்படியின்னுமொரு
வானமழும் நாளில்தான்
உனக்கும்
காதல்
குளிரெடுக்குமென்றால்...

அந்த நாளில்
மறக்காமல் குடைபிடிக்க
மறந்து -
இயல்பாய் மீண்டும்
நனைந்து வருவேன்...

நீயுன் குடையெடுத்து
வருவாயா?
எனக்கும் சேர்த்து.

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
30.01.2000

புதன், 21 அக்டோபர், 2009

இறப்பு என்பது கறுப்பல்ல


      
         அன்பான
அன்னையே...

இக்கவிதை
இன்றிலிருந்து
உனக்கோர்
ஆற்றுப்படை.

உனைப்பற்றி
எழுதும்போது
என் பேனா -
கர்வம் கொள்கிறது
மை கூட -
மையல் கொள்கிறது
நான் -
மரியாதை கொள்கிறேன்.

வாழ்க்கை அங்கு
செளந்தர்யமாயிருக்கும்...
கவிப்பூக்களையிங்கு
காணிக்கையாக்குகின்றேன்.

பதிவு செய்து -
பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்
உனது -
வாழ்நாள் பேச்சும்,
மனிதம்களில்
மணக்க ம்ணக்க
வாழ்ந்து கொண்டேயிருக்கும்
- மூச்சும்
உனக்கான
ப்ரார்த்தனைகளாக
இருக்கின்றன்.

தாயே...
செத்துச் செத்துத்தான்
வாழ்க்கையென்றாலும்
- இங்கு
நான் நலம்.
நாம் நலம்.
நலமறிய ஆவல்...

நீ -
மறைந்துபோன
நாள் முதலும்
இங்கு பிரசவங்கள்
நிகழ்கின்றனதான்...
ஆனால்
இடுப்பு வலி
அவஸ்தை மட்டும்
அப்படியேதானிருக்கிற்து.

பரந்தவெளிக்
காற்றில் வீசும்
உன் -
சுவாசத்தின்
வாசம்
உணரும்போதெல்லாம்
நான் கால்களால்
நடப்பதை விடவும்
உணர்வுகளால்
நடப்பதே அதிகம்.

அந்த -
உணர்வுகளுக்கு
உயிர் தந்தவள் நீ...

அமில
அதிர்ச்சியூட்டப்பட்ட
என் ஆத்மா
கரையும்முன்...

தூக்குக் கைதியின்
கடைசி ஆசையாக -
ஆவலாகக்
கேட்கின்றேன்

தங்கத்தாயே
இக்கணம்
நலமாயிருக்கிறாயா?

வாழப்பிறந்து
இறந்தவர்களுக்கு
மத்தியில்
நீ -
ஆளப்பிறந்து இறந்தவள்.

பொண்ணு பூப்பெய்திய
தாயின் சநதோசத்தோடு
தேசங்களை அரவணைத்து
தேகத்தில் மெலிந்தவள்.

பாசக் கயிற்றின் மீது
மட்டுமே
நடக்கத் தெரிந்திருந்த உனக்கு -
பள்ளங்க்ள் உள்வாங்குமோ
என்கிற -
பயமில்லாதிருந்ததால்தான்
நீ -
கடைசிவரைக்கும்
விழாமலேயே
இருந்திருக்கிறாய்.

அரசியலும்
அதிகாரங்களும்
உன்னிடம்
தோற்றுப் போனபோதுகூட
நீ நீயாகத்தான்
இருந்திருக்கின்றாய்...

நீயாகத்தான்
இறந்துமிருக்கின்றாய்.

உன் பணிகளோடு
உனக்குள் மூப்பு வந்து
இறப்பும் வந்தது
சிறப்பாய்...

இறப்பு என்பது
கறுப்பல்ல -
அடுத்தவுலகுக்கோர்
மொழிபெயர்ப்பு.

ஆக -
உன் நினைவுகளை
அருந்தி வரும்
விக்கல்
கண நேரத்தில்
கேட்கிறேன்...
" சகலருக்குமான
அன்னையே -
நலமாயிருக்கின்றாயா?'

இங்கே -
உனையிழந்து
 சொற்களுக்குள் சிறைப்பிடிக்க
என் எழுத்துக்கு வலுவில்லை
- என்றாலும்
சுகமான அவஸ்தையாய்
உன் ஞாபகங்களை மட்டுமே
இன்னமும்
தாலாட்டிக் கொண்டிருக்கின்றேன்.

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
31.10.1999

செவ்வாய், 20 அக்டோபர், 2009

வெள்ளைத்தாள் வேளாண்மை


என் மனசு குடித்த
மனசைக் குடித்த
- மகாராணி...

மனசு
மணக்க மணக்க
எழுதும் மடலிது.

நான் இப்போதெல்லாம்
எனக்கே நானில்லை.

வயதுகள்
சிதறிச் சிதறி
தடதடவென
ஓடுது காலம்.

உனது 'நான்'
உனக்குத் தெரியாமலேயே
இறந்துவிடும் நேரம்...

அந்தச் சாவு
உனக்கு,
உலகம் முழுவதும்
பரந்து விரிந்து விளங்கும்
உனது 'உண்மை நானின்'
பரப்பள்வை உணர்த்தும்.

பல கோடிப்
பெறுமானத்தில்
கொட்டிச் சிதறிப் பூக்கும்
உன்னில் நான்
கோடிமுறை
காணாமல் போனதுண்டு.

அதேநேரம்,
அடைகாத்து முதிர்ந்தவளாய்
அடிக்கொருதரம் நீ
உணர்ச்சிவசப்படுவதிலும்
அவ்வபோது
சிதறிப்போனதுமுண்டு.

மனசு
மணக்க மண்க்க
எழுதும் மடலிது
மகாராணியே
புரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டுக்குள்-
வாழ்வின் பூட்டுக்குள்
வ்சித்துக்கொண்டே
உன் அன்னையும்
அண்ணனும் பார்க்கும்
மாப்பிள்ளைக்கு
'ஆம்' சொல்லாதே.

ஆடைதான் அழகு
முகமூடிதான் முகம்
- என்று
நம் காதலை
உயில் எழுதி
அகண்ட உலகைப்
போலியாக
அனுபவிக்க ஆசையென்றால்
' ஆம்' சொல்லு.

ஆறாம் விரல்போல
அவர்கள்-
ஏதோவொன்றைத்
தேடுகிறர்கள்.

இதழ்கள் இனிப்புத்தான்
உனக்கும் எனக்கும்.

அவர்கள் சொல்கிறார்கள்
-என்பதற்காக
உன் உதடுகள்
சந்தோச ரத்தமா
குடிக்க வேண்டும்?

காதல் கோமாவில்
நம் அறிவின்
குரல்வளை
அறுபடக் கூடாது.

சாம்ராஜ்யம்
என நீ-
சந்தோசப்படுகிற
சமையலறை
உனககான
சதிச்சிறை.

இரக்கத்துகுரிய
தோழியே...

தண்டவாளங்களும்
ஆழக்கிணறுகளும்
கயிறு முடிச்சுக்களும்
நம் காதலின்
கல்வெட்டுக்களாகக்
-கூடாது.

என்றாலும்,
நான் -
இரவுகளை
கொறித்துத் தின்று
கொண்டிருக்கும் சப்தம்
உனக்கு மட்டும்தான்
கேட்கும்.

நம்மையே
பிசைந்து பிழிந்து
விருந்து வைத்த...
வியர்வை
மணத்த கதை
எப்போதும் -
அவர்களுக்குப் புரியாது.

மனசில் அலையடிக்க
மவ்னமாயிருக்கச் சொல்லி
வார்த்தையையும்
வாழ்க்கையையும்
ஒருசேரத் துண்டித்தவளே...

" பேச வேண்டாம்...
ஜென்மத்துக்கும் -
பேச மாட்டேன்..."
என்று -
வேதனைகளைத்
துப்பிச் சிதைத்தவளே...

பேசாமல் -
இருந்தால் மட்டும்
அனாதை விருந்தாளியாய்
காதல் வெளியேறுமா?

நீ -
மேய்ந்து
பார்க்க வேண்டும்
என்பதற்காகத்தான்
வெள்ளைத் தாளின்மீது
இங்கு நான்
வேளாண்மை செய்கிறேன்.

அழகுகளில் ஆர்ப்பரித்து
மனசு காணாமல்ப்போன
இடங்களில்
நான் உடம்பு தொலைத்ததில்லை,
உடம்பு தவறிய தறுணங்களில்
நான் மனசு
தொலைத்ததுமில்லை.

ஒருசேர
இரண்டையும்
தொலைத்தது
உன்னிடம்தான்.

இப்போதெல்லாம்...
ஏராளமாகச் சிறகுகள்
இருந்தும்
இருப்பதோ கூண்டுக்குள்.

அடிக்கடி -
நீ சொல்லும்
' அமீஷாவும் '
'அமித் ' அண்ணாவும்...

அவர்களுக்கும்
நம்மைப்போல
அலுக்காத காதல்...
ஒத்துழைக்கும் உடம்பு...
ஏராளக் காசு...
எனினும்,
மாறாத புத்தி...

மற்றபடி -
மனம்போல
மணவாழ்வில்
அவர்கள்
இணைவார்கள் என்றே
- தோன்றுகிறது.

நாம்....?

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
19.08.2001

வியாழன், 15 அக்டோபர், 2009

டயானா என்கிற நிலவும் என் பளிங்குக் கவிதையும்

ஒரு...
நிலவு
நித்திரை கொள்கிறது !

நிந்தனையுலகில்
நீடிக்கப் பிடிக்காமல்
நினைவு மறந்து போய்
நிலவு -
நித்திரை கொள்கிறது !

கனாக்களைத் தின்று
இராக்களை விழித்து
வாழ்ந்த
இந்த நிலவுக்குப் பெயர்
டயானா...

தட்டியெழுப்பாதீர்கள் !

சின்னச் சப்தமிட்டாலும்
திடுக்கிட்டெழும்...
பாவம் !

நிலவு
நித்திரை கொள்ளட்டும்
நிந்திக்க வேண்டாம்...

நித்திரையின் போதும்
நித்திய அழகு-
இந்த நிலவு மட்டுமே...

இந்த நிலவைப்
- பாலெனலாம்
- பூவெனலாம்
- புன்னகையெனலாம்
- சௌந்தர்யப்
பூந்தோட்டமெனலாம்
எப்படிப் பார்த்தாலும்
நிரந்தர அழகு
இந்த நிலவு மட்டுமே...

அழகின் அடையாளம்
இது -
நடந்து வந்தாலே
தனிக் கம்பீரம் !

இளமான நிலவு
இதமானது...
இந்த இளமையான
நிலவு
இதயங்களின் வசமானது !

ஆர்ப்பாட்டமில்லாத
இவ்வழகில்
அலையடித்து
- ஆர்ப்பரித்துக்
- காணாமல் போனோர்
ஆயிரம் பேர் !

வான் நிலவெரிந்த போது
குதூகலித்துப் போனவர்களுக்கு
- மத்தியில்
இந்த நிலவெரிந்த போது
குளிர்ந்து போனோர்
- கோடிப் பேர் !

அப்படியிருக்க
நிலாவைக் காயப்படுத்திக்
குருதிக் கையோடு
- கைகுலுக்கிக் கதையளக்கிறார்கள்
சில நூறு பேர்!

காய்க்கும்
மரத்துக்குத்தான்
கல்லடியும் பொல்லடியும்...

இந்த நிலவுக்கு
'கண்ணடி'பட்ட
காயங்களும் நிறையவே
- உண்டு

நட்சத்திரங்களே
நழுவிப்போன
நடு ராத்திரிகளில்
இந்த நிலவு மட்டும்
- விழித்தழுத
சோகக் கதையுண்டு

நிலவு-
நித்திரை கொள்கிறது
நிந்திக்க வேண்டாம்

இந்த நிலவுக்கென்று
ஒரு -
சொந்தக் கதையுண்டு
பால் ஒளியில்
இந்த நிலவு
பாழாய்ப்போன கதையுமுண்டு

வளர்பிறை
தேய்பிறைகளுக்கு
மத்தியில்
பூப்பெய்திய இதுவொரு
- பூரண நிலவு

பூச்சூடிப் பார்த்தால் -
எத்தனையழகு?

பொசுக்கிப்
போட்டிருக்கிறார்கள்
- பாவிகள் !

எமனுக்கும் எப்படி -
மனம் வந்தது?

புன்னகையிதழ் விரித்து
- பூக்கள் மலர்ந்த
வரலாற்றில்-
இந்த நிலவுப் பூ
புன்னகையிதழ் விரித்தே
இறந்து
போயிருக்கிறதா..?
இல்லை
இந்த
நிலவுப் பூ
நித்திரையில் இருக்கிறது

பனித்துளி பட்டாலே
உதிர்ந்து விழும்
- இதழ்களுக்கு மத்தியில்
இந்த நிலவுப் பூவை
ரசாயனத் துளியில்
நீராட்டியிருக்கிறார்கள்

நிலவே...
டயானா !
இதய சாம்ராஜ்யங்களின் இளவரசியே...

இக்கணம்
உன்னிழப்புக்கு
ஈடுசொல்ல
என் எழுத்துக்கு
- வலுவில்லையம்மா !

பேனா பிடிக்கும்
என் கரங்களுக்கு
காதலை மட்டுமே
கற்றுத் தந்தவள் நீ...

அப்படியிருக்கப் -
பேனா பிடித்தெழுதும்
சிலர்
உன்
குருதி மையிட்டுத்தான்
குறிப்பெடுத்திருக்கிறார்கள்

வாழும்போதும்
செத்துச் செத்து
வாழ்ந்தவள்
- நீ
சாகும் போதாவது
வாழ்த்தி வழியனுப்பி
வைத்தார்களா?

பிணந்தின்னிக்
கழுகுகள்...

உன் நாமம் சொல்லிச்சொல்லியே
பத்திரிகை வியாபாரம்
- செய்த
பகைவர்கள் அவர்கள்...

உன் மேனியழகும்
மாரழகும் பாடியே
பாரெங்கும் பத்திரிகை
- விற்ற பரதேசிகள் !

உன் பெயருக்கு
எத்தனை மவுசு...
அத்தனை
பத்திரிகையிலும்
நீ அணிவகுத்திருக்கிறாய்

உன் அந்தரங்கம்
முதலீடு செய்தே
ஆதாயம் தேடியவர்கள்...
அவர்கள் -
உன் காதலை
காட்சிப் பொருளாக்கி
மவுனத்தை
மலிவு விலையில்
- விற்பனை செய்தார்களே
அப்போதாவது -
நீ மௌனம் களைந்து
எழுந்து வந்திருக்கலாம்

இல்லை...

உனைத் திரௌபதியாய்த்
- திரித்தெழுதியபோது
சூர்ப்பனகையாய்
- உருவெடுத்திருக்கலாம் !

வித்தியாசமானவள்
- நீ
விளம்பரங்களையே
விரும்பாதவள் !

விளம்பரமே
உனை விரட்டி வந்து
எகிறி ஓடியதனால்தான்
இறப்பு வந்ததா?

இல்லை-
உலகுக்கு
இழப்பு வந்தது !

இதயங்களில்
அடைப்பு வந்தது!

இப்போது
அனாதை விருந்தாளியாய்
வாழ்க்கை
வெளியேறுகிறது !

நீ -
வாழ்வென்னும்
அற்புதத்தின்
வழிநடைப் பயணி !

காதல் பிறக்கும்
- தேகங்களில்
உன் தேகம் மட்டுமே
காதலால் பிறந்தது

காதலுக்காக -
உன் உயிரையுமல்லவா
உயில் எழுதியிருக்கிறாய்?

டயானா...
நாம் நலமில்லை
நீ -
நலமாயிருக்கிறாயா?

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

நன்றி
# செந்தூரம் ஆகஸ்ட் 05-11,2001 இதழ்

கொழும்பு வீதியில் உன் ஞாபகம்


முதுகில்
புத்தக மூட்டை
சுமக்காத...

இராக்களை
இண்டர்நெட்டுக்குள்
விழிக்காத...

மண்தரைப்
பள்ளியொன்றில்
மடிந்து கலைந்து
எண்ணெய் அழுக்கேறி
இத்துப்போன ஏடுகளில்
எச்சில் விட்டழித்தழித்து
கணக்கும் தமிழும் எழுதிய...

குக்கிராமம் முழுக்க
குளிரியற்கைக் காற்றோடு
- நெல்லும்
குடில் முழுக்க வறுமையும்
சதா விளைந்திருந்த...

தெருக்கொரு குழாயடிச்
- சண்டையோடு
முத்து முத்தாய்
ஊருக்குள் மட்டும்
மின்சாரம் முளைத்திருந்த...

இருபத்திசொச்சம்
வருஷங்களுக்கு முன்னையதோர்
இனிப்பான
கற்கண்டுக் காலம்!

மனசு கலைந்து
- எழுந்து
'பயாஸ்கோப் பார்க்கணும்'
என்றிருந்த ஆசையை
எகிறச் செய்ததில்
அப்பா 'தூத்தேரி'
என்று துப்பிவிட்டுப்போக...

எட்டுக்கும் ஒன்பதுக்கும்
இடையிலான வயதில்
- ஒரு நாள்
அப்பாவுக்குத் தெரியாமல்
அம்மா சேலை முடிப்பில்
வைத்திருந்து தந்த
ஐம்பத்தைந்து பைசா...
கொறிக்கவென்று
காரமாய்க் கொஞ்சம்
கொச்சிக்காய்த் தூள் கலந்த
உப்புத் துண்டங்கள்...

எல்லாம் எடுத்துச் சென்று
தனித்துப் பார்த்த படம்
'பாலும் பழமும்'

அதே கனவோடு
தூங்கியெழும்பி
வாய்கழுவாமல்
வசனங்கள் ஒப்புவித்து
வாரங்கள் வருஷங்கள்
தாண்டியொரு 'வைரநெஞ்சம்'

அடுத்ததொரு ஆடி மாதத்தில்
'அந்தமான் காதலி'

கடற்பாறை பிளந்துவரும்
கல்லெடுத்துத் தன் நடிப்பால்
சிற்பமெனச் சித்தரிக்கும்
சிவாஜியை சில்லென்று
எனக்குள் நான்
சுவாசிக்கத் துவங்கியது
இப்படித்தான்...

இடையேயொரு
இருட்டு ராத்திரியில்
இடறிய கால்விரலில்
வடிந்த குருதி
மறந்து சென்று பார்த்த
'நவராத்திரி'யும் ஞாபகம் !

தோட்டத்து கத்திரிக்காய்
விற்ற காசில்
கைவைத்தோர் 'கவரிமான்'...

காலம் கடந்தும்
பசுமையாய் எல்லாமே
நேற்றைக்கு முன்தினம்போல்...

நேற்றைக்கு
காற்றோடு வந்த சேதி
தூக்கிவாரிப் போட்டது

அந்த-
நீலவானப் பறவையின்
நினைவலைகள்
எண்ணச் சுவர்களை
எப்போதாவது அரிக்கும்போது
என்னில் ஏற்படும்
- சந்தோசம்
சடக்கென்று காணாமல்போய்...

ஆண்டவன் கட்டளையை
அபத்தமாகச் சொல்கிறார்கள்

வசந்தமாளிகை
- வாசஸ்தளத்தில்
ஓய்வென்னும்
நோய்க்கிடங்கொடுத்து
ஆரோக்கியமாயிருக்க
- வேண்டியவன்
சாவின் சாய்வு
நாற்காலிக்குச் சென்றுவிட்டதை
அபத்தமாய்ச் சொல்கிறார்கள்...

ஆலயமணி ஓசையில்
திடுக்கிட்டு
அறிவு சிலுப்பிச்
சிந்திக்கிறேன்

நடிப்புலக ராஜபாட்டையில்
சிறகுகளால் நடந்து
நாட்களை ருசிக்கச்
செய்து காட்டிய ரங்கதுரை
எல்லோர் முகங்களையும்
தொங்கப் போட்டுவிடச் செய்யும்
ஓய்வெடுத்துப் போனதில்...

சாவதற்குள்
நான்
செத்துவிடக்கூடாதா?
இன்றைய குட்டித்தீவின்
கொழும்பு வீதி முழுக்கவும்
அழகிகள் இருக்கிறார்கள்
அபரிமிதமாக இளநீர்களும்
- கிடைக்கின்றன

ஆனால்
மனசு மட்டும்
வெறுமையாய்...

'அழகியொருத்தி
இளநீர் விற்ற
கொழும்பு வீதி'யின்
அந்தக் கலகலப்பும்
காதலும் காணாமல்போய்...

பச்சை விளக்கெரிந்த
- பின்னும்
பாதையைக் கடக்க மனசின்றி...

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை

நன்றி
# செந்தூரம் ஆகஸ்ட் 05-11,2001 இதழ்

நானும் கடுங்குளிரில் சஹீதாக வேண்டும் !


மக்கா மண்ணில்
நானும் கடுங்குளிரில் சஹீதாக வேண்டும் !

ஹஜ்ஜுக்காக
ஒரு (க)விதை விதைக்க
என் பேனா உழும் பொழுதில்,
தவிர்க்க முடியாமல்
தவிக்க வைப்பதாய்....
அனல் மூடிய தவிட்டுச்
சாம்பரில் கால்வைத்ததாய்...
அமிலத் துளிகளில்
மனசு-
ஆழமிழ்ந்து போனதாய்...

அதேகணம்; மக்கா மண்ணின்
பாலைக் குளிரில் யானும் சஹீதாக
வேண்டுமென்று
தேகம் முழுக்க
ஊற்றெடுத்தூர்ந்து தெறிப்பதாய்...

இனிப்பாயும் கசப்பாயும்
ஒரு வலி பரவுகிறது !

*

அவர்கள்,
இந்திய தேசத்தின்
ஹஜ்ஜாஜிகள் !

புனித கஃபாவாலயத்தை
சந்தித்தழுது
தொழ வந்தவர்கள் !

நபி இப்ராஹிமின்
தியாக நெருப்பில்
குளிர்காய்ந்துணர்ந்து
திருத்த வந்தவர்கள்...
பாலையில் குளிர் சுட்டே
சஹீதாகிப் போனதில்;

தவிர்க்க முடியாமல்
தவிக்க வைப்பதாய்....

*

இந்திய மண்ணின் இறையடியார்கள்
அந்த இருபத்தேழு பேரும்,
இஹ்ராம் அணியும்போதே
அதுதான் தமக்கான கபனென்று
கனாக் கண்டார்களோ?

சீரழிந்து கிழிந்தவுலகின்
மறுபதிப்பாக வெளியிட
முடியாத வாழ்க்கையின்,
பிழைகளைத் திருத்தமுடியாது
தவித்துக் கசிந்துருகி...

பாவக்கறை கழுகி,
பச்சிளம் பாலகனாயாகிலும்
திரும்பி வராமல் -

மக்கா மண்ணிலே
மரணம்தான் வேணுமென
மன்றாடிக் கேட்டார்களோ....?

மணக்க மணக்க
நல்லமல் பீய்ச்சித்
தம்முயிரில் தீப்பிடித்துத்
தெளிந்தார்களோ...?

எஃதோ,
துல்ஹஜ் துடித்துப்
பிறந்து நான்காம்
பிறை விடுவதற்குள்,
பாலைமண் கசியச்
சுரந்த குளிர்
குருதியுறையாமல்
உயிர் எடுத்துப் போயிருக்கிறது

இன்னாலில்லாஹி...

*

மாரில் பால்சுரக்கப்
புனல்தேடிப் பரிதவித்துப்
பாதம் பதித்தோடிய
நாயகி ஹாஜராவாய்,
ஸ்ஃபா, மர்வாவிலொரு
தொங்கோட்டமின்றி...

உயிர் துளும்பி-
நாசு வைத்து நனைக்கத்துளி
ஸம்ஸம் இன்றித்தான்
அவர்கள்,
அல்லாஹ்வின் கஃபாவை
தரிசிக்கச் சென்று
குளிர்வாங்கித் தம்முடல்களில்
மடிந்து போனார்களோ?

லெப்பைக்
அல்லாஹும்ம லெப்பைக் !

கற்கண்டுத் தகிப்பாய்
இலக்குத் தேடிய
அவர்களது பயணத்தை,
அல்லாஹ்-
ஜன்னதுல் பிர்தவ்ஸுக்கு
இட்டுச் செல்வானாக !

அதே நேரம்;
ஆலாய்ப் பறக்கும்
மனசு அடக்கி
அடுத்த ஹஜ்ஜிலாவது
அந்த அரபு மண்ணில்
கொஞ்சம்
அழுது, தொழுது, தெளிய
அடியேனுக்கும் அல்லாஹ்
அருள்புரிய வேண்டும்
குறைந்தபட்சம் - நல் ஈமானுடன்
மக்கா மண்வாசமணைத்து
வீசும் குளிரில் நனைந்து
சஹீதாவதற்காவது !

- ரிஸ்கி ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# தினகரன் ஈதுல் அழ்ஹா பெருநாள் மலர் 02-02-2004