உயிரலறுகையில்
எழும் -
தொண்டைக்குழி
விக்கலானது
- வாழ்க்கை.
சங்கு ஊதி
சடங்குகள்
அடங்கியும்
முடங்கியேயிருந்தாள்
- பஞ்சவர்ணம்.
வறுமை
அழியாக் -
கரு' மை' யா?
இல்லை
அழிக்கும் -
கந்துவட்டிக் கடனா?
இவள் குடிசை
விலாசம் -
தேடியலையாமல்
அழையாமல்
வந்தமர்ந்து
- கொண்டது.
பரிதாபம்
உணரத் தெரியாத
கல்நெஞ்சுக்காரன்...
படுத்திய பாட்டில்
எழுந்து -
உயிரிழந்து
ஓடத் துணிந்தவளை,
அணைத்து
அமர்த்தியது
' தாமரை'.
பாசத்தைப்
பச்சை குத்திய
பச்சை மண்.
நரகத்திலாயினும்
வாழச்சொன்ன
- சொர்க்கம்.
அதன் -
மழலைச் சிரிப்பில்
இவள் முலையிலன்றி
வயிற்றில் -
பால் சுரந்தது.
மூச்சுத் திணறத்
திமிறிய பசியில்
அச்சம் பிதுங்கியது.
அடுப்பங்கரையில்
பூனை சுருண்டது.
பஞ்சம் பிழைக்கத்
துணிந்தாள் -
பஞ்சவர்ணம்.
செங்கல் சூளைச்சேறு
தன்னை மிதிக்கக்
கூப்பிட்டது.
வறுமை உதிர்க்கக்
கூப்பிட்டது.
முருகேசு
மூச்சு விட்டயிடத்தின்
வாசம் பிடித்துழைக்கக்
- கூப்பிட்டது.
கண்கள் குளமாகக்
குளிர்ந்து -
நடை தளர்ந்து
ஓடினாள்.
------- -------- -------- ---------
சூளையைப்போல
அதன் -
சொந்தக்காரனுக்கும்
தீயும் -
சேறுமான மனசு.
தனித்திருந்ததோர்
மழை பிடித்த
மாலையில்
சனி பிடித்தது.
அலறலை அடக்கிய
இடியின் பிடிக்குள்...
சாராய -
நெடியுடன் கூடிய
இரும்புப் பிடிக்குள்...
காமத் தீப்பிழம்புகளில்
கசங்கிக் -
கருகியெரிந்தது
அந்த வெண்பஞ்சு.
[தொடரும்]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
16.11.2009


%27.jpg)






