அந்த -
அழகிய கிராமத்தை
மசக்கைப் பெண்ணாக
உட்கார வைத்த-
நெடுநாள் மழையை
எடுத்துச் சென்றது
நடுநிசியிரவுக்
காற்று.
ஊரையே
கழுவித் துவைத்த
மழையின் சுவடுகளையும்
வந்த வேகத்திலேயே
துடைக்க முயன்று
தோற்றுமிருந்தது.
அரிதாரம் பூசாத
ஊருக்குள்-
அழையாமலாயினும்
பகல் விருந்தாளியாய்
நுழைந்த மழை...
' அந்த ஏழு
நாட்களுக்குப்' பிறகும்
ஏதோ -
தயக்கம் காட்டித்தான்
போயிருக்கிறது.
ஆரத்தழுவி-
வருடியணைத்து
நனைத்துப் பிரியும்
அற்புத மழை...
இம்முறை -
வெறியாட்டம் போட்டுத்தான்
அடங்கியிருக்கிறது.
நடுவகிடெடுத்து
வாரிய -
வயல்வரப்புக்
கூந்தலையும் கலைத்து...
விரிந்த குடைகளையும்
முள்ளந்தண்டில் உடைத்து...
போதையில் இருந்ததா
- மழை ?
அதன்
மூர்க்கப் பிடிக்குள்
மூச்சுத் திணறித்
தவித்தழுதது
அவ்வழகிய கிராமம்.
மழைக் குளிர்ச்சுகத்தில்
ஊருக்குள் சிலர்
இன்னும் -
தூங்கிப்போயிருந்தார்கள்.
மழைக் குளிர்ச்சோகத்தில்
ஊருக்குள் பலரும்
இன்னும்
பட்டினி கிடந்தார்கள்.
குடலில் பசித்தவர்களுக்கு
மத்தியில்
இந்தக் குளிரில்
உடலில் பசித்தவர்களும்
இருந்தார்கள்.
முதுகுப் பரப்பில்
நகக் கீறல்களை-
வாங்கியிருந்த
பூஞ்செடிகள்
விடிந்த பின்பும் வெட்கித்
தலைகுனிந்திருந்தன.
நாணமாய் -
அவற்றின்
கால் விரல்க் கோலமாய்த்
தெரிந்த புற்கள்மீது
பனி பூப்பூத்திருந்தது.
சின்ன இடைவெளியில்
பாய்ந்த பெருவெள்ளத்தில்
கால்வாய்களுக்கும்
வலியெடுத்திருக்கும்.
.
அவசர அவசரமாய்
அணைத்து முகர்ந்து
ஆலாபனைச்
சுகம் உண்டு
புரண்டு படுக்கும்
ஜடம்போல...
வந்தது
வரமென்று
அனுபவித்த பின்பு,
ஊருக்குள்
தப்பாகப் பேசவும்
ஆரம்பித்திருந்தார்கள்.
எப்படியோ...
' அப்பாடா 'வென்று
இரவோடிரவாக
அடித்து விரட்டியிருக்கிறது
- காற்று.
காதலாய்க் கசிந்துருகிக்
கசங்கி வியர்த்துக்
களைத்துக் குளித்துவந்த
புதுமணப்பெண்போல...
விடிந்து
பார்க்கையிலும்
அழகாய்த்தானிருக்கிறது
மழைக் காடாகிப்போன-
மலைகள்
முக்காடிட்டிருந்த
அந்த-
'மலைக்காட்டு'க் கிராமம்
செம்மண் தரைகளிலும்
மணத்தது -
மழை மிச்சம் வைத்துச்
சென்ற வாசம்.
வானமழுதது
பொறுக்காமல்
தரை தொட்டிறந்திருந்த
இலைகள்-
அழுக ஆரம்பித்திருக்க...
சற்றைக்கு முன்
பஞ்சு மரமுதிர்த்த -
பழுத்துக் காய்ந்த
இலைகளும்
காற்று வெளியிலேயே
கொஞ்சம் -
நின்று நிதானித்துக்
குளிர்காய்ந்துகொண்டன.
சேறு பூசாத
தெருப் பருக்கள்
தாண்டிச் சிலயிடங்களில்
தேங்கியிருந்த
' தெளிந்த நீரில்'
தெரிந்தது
நடுநெற்றியில் இன்னும்
சூரியப்பொட்டு வைக்காத -
கண்ணீர் துடைத்திருந்த
- வானம்.
அழுத களைப்பில்
கொஞ்சம் -
கறுத்துத்தானிருந்தது.
--------- -------- -------- ----------
ஊர் நனைத்துக்
கூரை வடித்த -
வானக் கண்ணீரைப்
பருகி மாய்ந்த
குடில்களின் கதைகளும்...
மழைக்காலம்
உணர்வெரித்து
உடல் கொதித்துக்
குளிர்ந்த
உடல்களின் கதைகளும்...
இந்த -
மலைக்காட்டுக்
கிராமத்திலுண்டு.
பஞ்சவர்ணக் கதை
இதில்
இரண்டுமான ரகம்.
[தொடரும்]
ரிஸ்கி ஷெரீப்
இலங்கை
03.11.2009

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக