மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 ஜூன், 2013

கவிதைகளின் தேடல்



கவிதைகள்
அலைந்து
கொண்டிருக்கின்றன

காற்றில்
அறைபட்டுக் கசங்கி...

இரவுப் பனியில்
குளிர்ந்தொடுங்கி...

வெயிலில்
கறுத்துக் காய்ந்து...

மழையில் குடையின்றி
நனைந்து...

நிர்வாணமாக
அலைந்து
கொண்டிருக்கின்றன
கவிதைகள்

காட்டிலும்
மேட்டிலும்

பாலையிலும்
சோலையிலும்

கடலுக்கும்
வானுக்குமிடையிலான
ஆகாயவெளி
முழுக்கவும்

பசி பிடித்தும்
மதம் பிடித்தும்
வெறி பிடித்தும்

காதல் கசிந்து
தோள் சாய்ந்து
அழுது புலம்பவும்

கட்டியணைத்துக்
கடித்துக் குதறி
காமம் தணிக்கவும்

சமூகச்
சோகமுரைத்துக்
கடனும் பழியும்
தீர்க்கவும்...

அலைந்து
கொண்டிருக்கின்றன
இன்னும் எழுதப்படாத
அழகான கவிதைகள்

தம்மையலங்கரித்து
உடுத்திப் பார்க்கவும்
எடுத்தாளவும்
தெரிந்ததோர்

கவிதைக்காரனையோ
கவிதைக்காரியையோ தேடி.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: