மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

உணர்வில் குத்திய முத்திரை

உங்கள் விழிகள்
விளிக்கும் மிரட்சி,

காவிகளைப்
- பேய்களாகப்
பார்த்ததில் வந்தது.

ஈக்களாகப் பாருங்கள்...
அவை -
மொய்க்க மட்டுமே
வந்திருப்பது புரியும்.

அவற்றின்
விஷ வருடல்,

நம் விரல்
அழுத்தத்தின்
எல்லை என்பதை
நம்மில் பலரும்
அறியாமல்தான்
இருக்கிறோம்.

காவிகள்
வேலி கட்டியடைக்க
மந்தைக்
கூட்டமா நாம்?

இல்லை ...
எப்போதும் எங்கேயும்
நிற்காமல் தாவும்
மந்திக் கூட்டமா?

மனிதர்களே நாம்
என்பதை மறந்துதான்
ஆலாய் பறந்து
கொண்டிருக்கின்றோம்,

மனசு விரியத்
துணிவின்றி...

காவிகளல்ல,

புவி பிளந்து
புதிதாயொரு
பொறி கிளர்ந்தாலும்
பொசுக்கிட முடியாது,

நம் கல்பில் ஜொலிக்கும்
ஹலால் வைரமென்று
அறுத்துச் சொன்னாலும்
அவர்களுக்குப்
புரியப் போவதில்லை.

அணைத்துச் சொல்ல
வேண்டியிருக்கிறது.

ஹலால் வெறும்
இலட்சினையல்ல...
நம் வாழ்க்கை
- இலட்சியம்.

இதமும் சுகமும்
இழைத்துப்
பின்னியழகாய்
உயிரில் மாட்டியிருக்க,

வெறும் சுவர்
தளர்ந்திடிவதில்
நமக்கென்ன கவலை?

அட்டைகளிலும்
பெட்டிகளிலும்
அச்சிடத் -
தடைவிதித்ததில்
ஆகப்போவது
ஒன்றுமில்லை.

சேவல் கூவி
காலைப் பொழுதுகள்
காயப்பட்டதுண்டா?

காரணமின்றியேன்
வலிந்தெடுத்துத்
தூவுகிறீர்கள்
வலியையும்
சினத்தையும்.

தண்டல்காரர்களாய்
தடியெடுத்துச் சீவ
நினைக்கும்
ஆக்ரோஷமும்
அர்த்தமற்றது.

உணர்வில் குத்திய
முத்திரைக்கு
உருவம் -
செதுக்கியதில்தானோ
பிரச்சினை?

அவல் கிடைக்காத
வாய்க்குக் கொஞ்சம்
ஹலால் கிடைத்து
மென்று -
பார்த்திருக்கிறார்கள்.

மெல்லக் கசந்தவர்கள்
கொஞ்சம் வேடிக்கை -
பார்த்திருக்கிறார்கள்

கொன்று குவித்தாயினும்
வென்று பார்க்கப்
போவதில்லையென்று
கைதட்டி ஆர்ப்பரித்த
கூட்டத்துக்கும் தெரியும்.

அப்படியிருக்க,

தோற்றதா துவண்டதா
வென்றதா-
வீழ்ந்ததாவென்று...

பெருந்துடக்குக்
குளிக்காமல்
பேசியலைகிறோம்.

எச்சில் வார்த்தைகளில்
ஏசிக் களைக்கிறோம்.

உலமாக்களை
உச்சி முகரத்
தெரியாமல்...

முப்திகளை
முஸாபஹாச்
செய்ய மறந்து...

உதடுகளையும்
உதைக்கப் -
பழக்கியிருக்கிறோம்.

அதிர்வது
ஈமானெனப்
புரிந்து கொள்ளாமல்.

மனசில் மணக்கக்
குர்ஆன் சுமக்கும்
நம்மவர் நடையின்
மென்மையில்
உணரவில்லையா
- நீங்கள்,

தற்காலிகமாகவேனும்,

இனவெறித் தீ
கொழுந்தெரியாமல்
அடங்கியிருக்கும்
அழகை.

அன்பான,

உண்மைக்கு
உரியவர்களே...

உடையில்
கசங்கவிட்டும்
உறக்கத்தில்
நழுவவிட்டும்,

உழைப்பில்
சிதறவிட்டும்
உறவில்
ஓடவிட்டும்,

பார்வையில்
எரியவிட்டும்
கேள்வியில்
கரையவிட்டும்

உணவு கிளறி
மட்டுமே -
ஹலால் தேடும்
நம்மை ஒருநாள்,

சாத்தான் சதி
தாண்டி வந்தும்
எரிக்கக் கூடும்
அல்லாஹ்வின்
கோபப் பார்வை.

அக்கணம்
காவிகளும்
பேய்களுமல்ல -

மொய்க்கும் ஈக்கள்
வந்தாலே போதும்
நாம் மண்கவ்வி
மாண்டழிந்துபோக.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: