மரமேந்திப் ப்ரார்த்தித்து
மழை வேண்டித் தந்த
மகாராணி.
மலர்கள் மனிதர்கள்
மலைகள் மரங்கள்
உயிரினங்களையும்
குழந்தைகளாகவே
குதூகலித்துத் தாலாட்டித்
தன் மடியில்
இருக்கை தந்தமர்த்தித்
தளர்ந்தஞ்சிடாது
வளர்த்துவிட்ட தாய்.
வனப்பும் வாசமும்
சுகமும் சுவாசமும்
அழகாய் ஒருசேர
ஊட்டிச்சுகித்த சொர்க்கம்.
மணக்கும்
மூச்சணிந்தெல்லாம்
உலாவரப் பார்த்து
ரசித்த மனசு.
மூச்சிறந்து நாறும்
உடல்களையும்
எடுத்தெறிந்திடாத
இத்தெய்வத்தை,
பாம்புகளும்
புற்றுக் கோவில்
கட்டித்தான்
வணங்கியிருக்கின்றன.
உலர்ந்துதிர மனசின்றி
விரும்பிக் கீழே
இறங்கியிருக்கின்றன
இத்தாயை ஆசீர்வதிக்கப்
புறப்பட்ட பூக்களும்.
காற்று இவள்
உடன்பிறப்பு.
எப்போதுமே
தலைகோதித்
துணையிருந்தாலும்
துயருறும் வேளை
எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல்...
சோகம் உடுத்தித்
தனக்குள் மவுனமாகவே
அடக்கியழத் தெரிந்த
இந்த அற்புத அன்னை,
எப்பொதும்
திட்டித் தீர்த்ததில்லை
தன்னையுதைத்து
மிதித்த கால்களையும்.
அப்படியிருந்தும்,
தலை மழித்து
மொட்டையடித்துத்தான்
பூமித் தாயைச்
சித்திரவதை செய்திருக்கிறான்
நாகரிக வெறிபிடித்து
அபிவிருத்திப் போதை
தலைக்கேறியலைந்த
மனிதம் -
தொலைத்த அரக்கன்.
இயற்கையழிக்கப்
புறப்பட்ட இவன்
தாயைப் புனரவும்
கூச்சமற்ற பாவி.
மூச்சுத் திணறத்
திமிர வருத்தி
அடுக்கடுக்காய்
உடலேறியழுத்தி
உதடு கிழித்து
மாராப்பு விலக்கி
மார் குதறி...
மல்லாக்கப் புரட்டி
முதுகு கீறி
மானம் பறித்ததில்தான்
நொந்து போனதோ
இவள் பெண்மை.
நதிகளும் அருவிகளும்
தன்னைச் சேர வராமல்
வற்றிப்போனதில்
கடலுக்கும் சந்தேகம்
கடலன்னை
பூமித்தாயைத்
தன் தோளில்
தாங்கிய தமக்கை.
அழுகை தோற்கக்
கதறுவதில் உடன்பாடில்லாக்
கோபத்தில் எட்டியுதைக்கத்
திணறித் தெறிக்கின்றன
கடலன்னைக் -
காலடித் தீத்தட்டுக்கள்.
அதிர்ச்சியிலுறைந்து
வெடித்துச் சிதறுகிறது
பூமித்தாயின் சிறுபகுதி.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக